றிஸ்வான் சேகு முகைதீன்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட கல்வெவ சிறிதம்ம தேரருக்கு டிசம்பர் 06ஆம் திகதி வரை கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் கல்வி அமைச்சுக்கு முன்பாக இசுறுபாயவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பான மற்றுமொரு வழக்கிலேயே அவருக்கு இவ்வாறு 14 நாட்கள் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவ ஒன்றியம் (IUBF) அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்றையதினம் (23) கொழும்பு மேலதிக நீதவான் டி.என்.எல் மஹவத்த முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் சார்பில், சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷவீந்திர விக்ரம மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீர்ஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
இதன்போது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 7 (2) பிரிவின் கீழ் சந்தேகநபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் இணங்குவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அதற்கமைய, தலா ரூ. 5 இலட்சம் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதித்த நீதவான், மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.
கடந்த ஓகஸ்ட் 18ஆம் திகதி கொழும்பு, யூனியன் பிளேஸில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த, அரசாங்கத்திற்கு எதிரான கண்டன பேரணியைத் தொடர்ந்து, லசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் உள்ளிட்ட மூன்று செயற்பாட்டாளர்களும் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவை பொலிசார் முதலில் பெற்றனர்.
பின்னர், மூவரையும் 90 நாட்களுக்கு மேலும் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியது.
தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை சட்டமா அதிபரின் உத்தரவு கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த நவம்பர் 17ஆம் திகதி உத்தரவிட்டார்.
அந்த வகையில் 89 நாட்கள் தடுப்புக் காலிலும் அதன் பின்னர் 9 நாட்கள் விளக்கமறியலிலுமென 98 நாட்கள் சிறையிலிருந்த சிறிதம்ம தேரருக்கு இன்றையதினம் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும் வசந்த முதலிகே தொடர்ந்தும் விளக்கமறியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment