உலக அந்நியச் செலாவணி கையிருப்பில் பாரிய வீழ்ச்சி : ஒரு டிரில்லியன் டொலர் கரைந்தது - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

உலக அந்நியச் செலாவணி கையிருப்பில் பாரிய வீழ்ச்சி : ஒரு டிரில்லியன் டொலர் கரைந்தது

உலக அந்நியச் செலாவணி இருப்பு சாதனை அளவாக வேகமாகக் கரைந்து வருகிறது.

இந்தியா முதல் செக் குடியரசு வரைப்பட்ட பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்களுடைய நாணயங்களைப் பலப்படுத்த தலையிடுகின்றன. இதுவே இருப்பு குறைவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

உலக அந்நியச் செலாவணி கையிருப்பு இந்த ஆண்டில் ஏறக்குறைய ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் அல்லது 7.8 வீதம் குறைந்துள்ளது.

அமெரிக்காவின் புளும்பெர்க் நிறுவனம் 2003ஆம் ஆண்டு முதல் உலக அந்நியச் செலாவணி இருப்பு பற்றிய தகவல்களைத் திரட்டி வருகிறது. 

அப்போது முதல் இதுவரை இந்த அளவுக்கு இருப்பு குறைந்ததில்லை. பல நாணயங்களின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்தக் குறைவுக்கு காரணம்.

அமெரிக்க டொலரின் மதிப்பு பல நாட்டு நாணயங்களுக்கு எதிராக 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கூடியுள்ளது.

அந்நியச் செலாவணி இருப்பு குறைவது, நாணயச் சந்தையில் நிலவும் இறுக்கமான சூழலைப் பிரதிபலிப்பதாக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிராக தங்கள் நாணயங்களின் மதிப்பு குறைவதால் அந்தக் குறைவைத் தடுக்க பல நாடுகளின் மத்திய வங்கிகளும் தலையிடுகின்றன.

இந்தியாவின் கையிருப்பு இந்த ஆண்டு 96 பில்லியன் அமெரிக்க டொலர் குறைந்து 538 பில்லியன் டொலராக உள்ளது. 

ஜப்பான் தனது யென் நாணய மதிப்பு குறைவதை மெதுப்படுத்த செப்டெம்பர் மாதம் சுமார் 20 பில்லியன் டொலர்களை செலவிட்டது.

செக் குடியரசு அரசாங்கம் தன் நாணய மதிப்பு குறைவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக அந்த நாட்டின் கையிருப்பு கடந்த பெப்ரவரி முதல் 19 வீதம் குறைந்துள்ளது.

பல நாடுகளின் மத்திய வங்கிகளும் இன்னமும் வலுவாகவே இருப்பதால் அவை தங்கள் நாணயங்களை வலுப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், மலேசியா, இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் அந்நிய கையிருப்பு பற்றிய தகவல்களை நேற்று வெளியிட திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் போன்ற இதர பல நாடுகளின் இருப்புகள் வேகமாகக் குறைந்து வருவதாகவும் புளும்பெர்க் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment