மஹிந்தவை மீண்டும் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர் : இராஜினாமா செய்திருந்தால் வன்முறை தோற்றம் பெற்றிருக்காது - டிலான் பெரேரா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 11, 2022

மஹிந்தவை மீண்டும் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர் : இராஜினாமா செய்திருந்தால் வன்முறை தோற்றம் பெற்றிருக்காது - டிலான் பெரேரா

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கடந்த மே மாதம் 9 ஆம் திகதி தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மீண்டும் அவரை மேடைக்கு ஏற்றி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். மே 09 ஆம் திகதிக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்திருந்தால் நாட்டின் வன்முறை தோற்றம் பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மே மாதம் 09ஆம் திகதியன்று காலை அல்லது அதற்கு முன்னர் பதவி விலகியிருந்தால் நாட்டின் வன்முறை தீவிரமடைந்து பேரழிவு ஏற்பட்டிருக்காது, அரசியலில் அவரும் கௌரவமாக இருந்திருப்பார்.

மே மாதம் 09 ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு சிலர் அலரி மாளிகையில் கூட்டத்தை நடத்தினர். காலி முகத்தில் போராட்டகளத்திற்கு தாக்குதல் நடத்தும் அளவிற்கு அங்கு உத்வேகம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அலரி மாளிகையில் ஒன்று கூடியவர்கள் காலி முகத்திடல் போராட்டகளத்திற்கு தாக்குதலை நடத்தினார்கள். அதனால் முழு நாட்டிலும் தீ பற்றியெரிந்தது. இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். மே 09ஆம் திகதி காலை அல்லது அதற்கு முன்னர் அவர் பதவி விலகியிருந்தால் எப்பிரச்சினையும் தோற்றம் பெற்றிருக்காது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கடந்த மே மாதம் 09 ஆம் திகதி தவறாக வழிநடத்தியவர்கள் தற்போது மீண்டும் அவரை மேடைக்கு ஏற்றி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். களுத்துறையில் இருந்து அதற்கான பயணத்தை தற்போது ஆரம்பித்துள்ளார்கள்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வின் போது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை கவனிக்கத்தக்கது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிட்டார், அதன்போது அருகில் இருந்தவர் தற்போது ரணில் என குறிப்பிட்டதன் பின்னரே அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் உரையாற்றுகிறார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பில் 'நாங்கள் டலஸ் அழகபெருமவிற்கு வாக்களித்தோம், இருப்பினும் அவர் தோல்வியடைந்தார்' என குறிப்பிட்டார். ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தெரிவில் பல முரண்பாடுகள் காணப்படுவதை நன்கு விளங்கி கொள்ள முடிகிறது என்றார்.

No comments:

Post a Comment