(எம்.மனோசித்ரா)
நாட்டில் சட்ட விரோத மதுபான உற்பத்தி 300 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
இலங்கை மதுவரித் திணைக்களத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சட்ட விரோதமானது மற்றும் சட்ட ரீதியானது என்ற இரு வகை மதுபானங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கைக்கு அமைய 2004 தொடக்கம் 2016 வரை மதுபான தொழிற்துறையில் 95 சதவீதம் வளர்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இதில் 50 சதவீதம் மாத்திரமே சட்ட ரீதியானதாகும். சட்டத்துக்கு முரணான மதுபான தொழிற்துறை 300 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது தொடர்பில் தீர்க்கமாக அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நாகரிகமான தொழிற்துறைகளில் கூட இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கிராம புறங்களில் நீண்ட இடைவெளியில் மதுபானசாலைகள் காணப்படுகின்றமை, அப்பகுதிகளில் சட்ட விரோத மதுபான தயாரிப்பு மற்றும் பாவனைக்கு ஏதுவான காரணியாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்ல. சட்ட விரோத மதுபான தயாரிப்பு மற்றும் பாவனையைக் கட்டுப்படுத்தலாகும் என்றார்.
No comments:
Post a Comment