ரிஸ்வான் சேகு முகைதீன்
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜிமாவத்தை தீயினால் சுமார் 80 தற்காலிக தோட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (27) 7.30 மணியளவில் இடம்பெற்ற இவ்வனர்த்தத்தை தொடர்ந்து, கிராண்ட்பாஸ் பொலிஸார், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர், கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களுடன் இணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.
அதற்கமைய, குறித்த 80 வீடுகளில் வாழ்ந்த 80 குடும்பங்களைச் சேர்ந்த 220 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள், களனி விகாரை மற்றும் முவதொர உயன குடியிருப்புத் தொகுதியின் சமூக மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆயினும் குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும், தீ ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் அறிய அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் முன்னெடுத்துள்ளனர்.
குறித்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு நேற்றையதினம் ஜப்பானிலிருந்து உத்தரவிட்டிருந்தார்.
No comments:
Post a Comment