குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சூரிய மின்கல தொகுதி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 500 மெகாவாற் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தியை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால் நிர்மாணப் பணிகள் பாதியில் நின்ற 69,000 வீடுகளில் 25,000 வீடுகள் இதற்காகப் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அந்த வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்படும் சூரிய மின்கல தொகுதி மூலம் 20 கிலோவாற் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இம்மின்சாரம் வீடுகளில் பயன்படுத்தப்படுவதுடன் மேலதிகமானவை தேசிய மின் கட்டமைப்புடன் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரரிவித்தார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான உதவியின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் தற்போது பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன்படி மொணராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அரச காணிகளில் கிராமங்களாக ஆரம்பிக்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வெளிநாட்டு நிறுவனமொன்றுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் முதலீட்டாளர்களால் 20 வருடங்களுக்கு சூரிய மின்கல தொகுதிகளின் பராமரிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இந்தத் திட்டத்தின் முதல் 7 வருடங்களுக்கு ஒரு அலகு மின்சாரத்திற்கு முதலீட்டாளருக்கு தலா 0.116 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படும். எஞ்சியுள்ள 13 ஆண்டுகளுக்கு ஒரு அலகு மின்சாரத்திற்கு தலா 0.0816 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படவுள்ளது.
இந்த சூரிய மின்கலத் தொகுதி திட்டம் மூலம் ஆண்டுக்கு 648 கிகாவாற் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. எனவே இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த செலவில் 116.64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டு 20 வருட காலப் பகுதியில் இந்தத் திட்டத்தினால் 2,332.80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அந்நியச் செலாவணி நாட்டுக்கு சேமிக்க முடியுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment