நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவே இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் : ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவீபியினருடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பார் - மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Friday, April 29, 2022

நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவே இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் : ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவீபியினருடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பார் - மைத்திரி

(இராஜதுரை ஹஷான்)

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமானதாக அமைந்துள்ளது. புதிய பிரதமர் தலைமையில் சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கவே இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறோம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல்,பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் 11 பங்காளி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை. அரச சேவையாளர்கள் முதன்முறையாக அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்கியுள்ளதையும், 1000 ம் தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதையும் அலட்சியமாக கருத முடியாது. 

அரசாங்கம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும்.

சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

புதிய பிரதமர் தலைமையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதை அரசாங்கத்திலிருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் கூட்டாக அறிவித்தனர்.

புதிய பிரதமர் உட்பட 15 தொடக்கம் 20 வரையிலான அமைச்சர்களை உள்ளடக்கிய வகையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி எதிர்வரும் நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியினருடனும், மக்கள் விடுதலை முன்னணியினருடனும் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்கவுள்ளார். சுதந்திர கட்சியும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும். 

அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. தற்போதைய நிலையில் ஜனாதிபதியை பதவி நீக்கவும் முடியாது. பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் சாதகமான சூழல் நாட்டில் கிடையாது.

சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து அதனூடாக குறுகிய காலதீர்வை கண்டு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு மகா சங்கத்தினர் உட்பட மதத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தான் பதவியில் உள்ளேனா என எண்ணுவார் என்றார்.

No comments:

Post a Comment