(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட முறைமை ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய 5 நீதியரசர்கள் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கிய பூரண நீதியரசர்கள் அமர்வினை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றைக் கோரியுள்ளார்.
உயர் நீதிமன்றுக்கு திங்கட்கிழமை (28) நகர்த்தல் பத்திரம் ஊடாக இந்த கோரிக்கையினை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகள் முன் வைத்துள்ளனர்.
நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு அழைத்த, மனுவின் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தரப்பு, மனுவுடன் தொடர்புடைய விடயம் அரசியலமைப்பின் 43(1),43(2) ஆகிய உறுப்புரைகளை ஆராய வேண்டிய விடயப் பரப்பாக காணப்படுவதால், பூரண நீதியரசர்கள் அமர்வு அதற்கு அவசியம் என சுட்டிக்காட்டினர்.
அத்துடன் அடுத்த தவணையில் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பதாக இந்த பூரண நீதியரசர்கள் அமர்வில் உள்ளடங்கும் நீதிபதிகளை பெயரிடுமாரும் அவர்கள் பிரதம நீதியரசரை கோரியுள்ளனர்.
ஏற்கனவே இந்த மனு உயர் நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பின்னணியில் இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் மனுதாரருக்காக மன்றில் சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ ஆஜராகிறார்.
'மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள வீட்டை, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்காக அவருக்கே கையளிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கடந்த 2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த வீடு 180 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்ட வீடாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் பிரதானியாக இருந்த ஒரு கூட்டத்திலேயே இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
மிகப் பெரும் வணிக பெறுமதியைக் கொண்ட பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு சொத்தை, தான் பிரதானியாக இருக்கும் அமைச்சரவை ஊடாக தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை நியாயமற்றது. இது 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்துக்கும் முரணானது.
இந்நடவடிக்கை ஊடாக முன்னாள் ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை தகர்த்தெறிந்துள்ளார். அதனால் அந்த வீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானம் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என உத்தரவிடவும்.' என மனுதாரர் மனுவூடாக கோரியுள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆஜராகும் நிலையில் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment