திவிநெகும வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் இவ்வாறு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீர்மானத்தை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்துடனான ரூபா 29.4 மில்லியன் (ரூ. 2.94 கோடி) பெறுமதியான, 5 மில்லியன் பஞ்சாங்கங்களை (லித) அச்சிட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேகநபர்களுக்கும் எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜனவரி - 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரப் பொருளாகப் பயன்படுத்துவதற்காக குறித்த பஞ்சாங்கங்கள் அச்சிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதி முறைகேடு தொடர்பான குறித்த வழக்கில் பிரதிவாதியின் சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைய, அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விடுவிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானம் பெப்ரவரி முதலாம் திகதி வழங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதன் போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், வழக்கு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தமது கட்சிக்காரரை நிரபராதி என விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய இன்றையதினம் (01) குறித்த இருவரையும் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment