(இராஜதுரை ஹஷான்)
பிரித்தானியர்களின் ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரமடைவதற்காக போராடிய அனைத்து அரசியல் தலைவர்களும், மதகுருமார்களும் 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் நினைவுக்கூருவதுடன்,கௌரவிக்கப்படுவார்கள். மூவினத்தவர்களும் இன, மத பேதங்களை துறந்து இலங்கையர் என்ற அடையாளத்துடன் சுதந்திரத்திற்காக போராடியுள்ளனர் என பாதுகாப்பு மற்றும் பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 74ஆவது தேசிய சுதந்திர தினம் இம்முறை 'சவால்களை வெற்றி கொண்ட சுபீட்சமான நாளைய தினத்திற்கான சௌபாக்கிய தேசியம்' என்ற தொனிப்பொருளின் கீழ் கௌரவமான முறையில் எதிர்வரும் 4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்;ஷ தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், விசேட பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குப்பற்றுதலுடன் கொண்டாடப்படவுள்ளது.
123 ஆண்டுகள் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கை 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி விடுதலை பெற்றது. அக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூவின மக்களும் எவ்வித இன வேறுப்பாடுமின்றி சுதந்திரத்திற்காக போராடினார்கள். சுதந்திரத்திற்காக போராடிய அனைத்து இன மக்களும் இம்முறை கௌரவிக்கப்படுவார்கள்.
சுதந்திர தினத்தன்று முன்னாள் பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவின் உருவச் சிலைக்கு மாத்திரம் மலரஞ்சலி செலுத்தப்பட்டு கௌரவமளிக்கப்பட்டது. சுதந்திரத்திற்காக முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவுடன் ஒன்றினைந்து செயற்பட்டவர்களும் இம்முறை கௌரவிக்கப்படுவார்கள்.
சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைச்சாலை சென்று, உயிர் தியாகம் செய்த அரசியல் மற்றும் மத தலைவர்கள் அனைவரும் கௌரவிக்கப்படுவார்கள். சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வெளிநாட்டு விசேட பிரநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன, மத, மொழி பேறுப்பாடின்றி சுதந்திரத்திற்காக போராடிய மூவினத்தவர்களையும் கௌரவிப்பது இம்முறை சுதந்திர தின நிகழ்வின் பிரதான அம்சமாகும் என்றார்.
No comments:
Post a Comment