ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்
76ஆவது வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற போதிலும், தேசிய சுகாதார முறைமைக்குள் பெருந்தோட்ட மக்கள் இதுவரையில் உள்வாங்கப்படவில்லை என்பது துர்ப்பாக்கியமானது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சு மீதான வரவு - செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையின் 76ஆவது வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படுகின்ற போதிலும், நாட்டின் தேசிய சுகாதார வேலைத்திட்டம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்றடையாதிருப்பது துர்ப்பாக்கியமானது.
குறிப்பாக தோட்டத்துறை மக்களுக்கு தேசிய சுகாதார சேவை இன்னும் சென்றடையவில்லை. தோட்டங்களுக்கு தோட்ட நிர்வாகங்களாலே சுகாதார சேவை பெற்றுக் கொடுக்கப்படுகின்றது. எம்.பி.பி.எஸ். தர வைத்தியர் மேற்கொள்ள வேண்டிய சேவையையும் தோட்ட வைத்திய மருத்துவ அதிகாரியினாலேயே இந்த சேவை வழங்கப்படுகின்றது.
அத்துடன் தோட்டங்களில் 450 மருந்தகங்கள் இருக்கின்றன. அவற்றை தேசிய சுகாதார வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கி, ஏனைய பிரதேச மக்களுக்கு வழங்கப்படுகின்ற வைத்திய சேவையை தோட்ட மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கண்டி மாவட்டத்தில் 28 தோட்ட வைத்திய மருந்தகங்கள் இருக்கின்றன. அவற்றை ஆரம்பமாக தேசிய வைத்திய சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தோட்டதுறை சார்ந்தவர்களுக்கு இருக்கும் வைத்தியசாலைகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. அவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெருந்தோட்டங்களில் உள்ள வைத்தியசாலைகள் அனைத்தையும் தேசிய சுகாதார முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இதற்கு கொள்கை ரீதியான வேலைத்திட்டம் அவசியம்.
சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கொள்கை ரீதியாக இந்தத் தீர்மானத்தை எடுத்து செயற்படுத்தும்போது நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகள் கிடைக்கும். இதனூடாக உங்களின் பெயர் வரலாற்றில் பதியும்.
அதேபோன்று சுகாதார பராமரிப்பு நிலையங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை உள்வாங்கி, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment