அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, December 20, 2021

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

நாளை (21) முற்பகல் 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றையதினம் (20) முற்பகல் 8.00 மணி முதல் நாட்டின் 5 மாவட்டங்களில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார், நுவரெலியா, திருகோணமலை, பொலன்னறுவை, இரத்தினபுரி ஆகிய 5 மாவட்டங்களில் 24 மணி நேர அடையாள பணிப் புறக்கணிப்பாக முன்னெடுக்கப்பட்ட இப்பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததால், நாளை (21) மு.ப. 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் இப்போராட்டத்தை தொடரவுள்ளதாக, அச்சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் இடமாற்றம், புதிய வைத்தியர்களுக்கான நியமனம் உள்ளிட்ட விடயங்களில் சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.

தமது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்படப் போகும் நெருக்கடிகளுக்கு சுகாதார அமைச்சும் அதன் அதிகாரிகளுமே பொறுப்பேற்ற வேண்டும் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பங்குபற்றலின்றி வெளியிடப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர்களின் இடமாற்ற பட்டியலை மீளப்பெறல், உள்ளக பயிற்சியை நிறைவு செய்து வைத்திய நியமனத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நியமன பட்டியலை எதிர்த்தல், தர வைத்தியர்களுக்கான இடமாற்றங்களை திகதிகளை அமுலாக்கும் திகதிகளில் காணப்படும் சிக்கலுக்கு தீர்வு வழங்காமை, சரியான பங்காளிகளை ஆலோசிக்காமல் மருத்துவ சேவை யாப்பு மாற்றப்பட்டமை, மருத்து வசபைக்கான தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்கமைப்புக்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படாமை, தேசிய சம்பள கொள்கையை பாதிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், கொவிட் சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சை சேவைகளை எவ்வித தடங்கலுமின்றி முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment