இலங்கையில் இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர் ! விசேட கண்காணிப்பில் குடும்பத்தார் உள்ளிட்ட அவருடன் நேரடி தொடர்பைப் பேணியோர் - News View

About Us

About Us

Breaking

Friday, December 3, 2021

இலங்கையில் இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர் ! விசேட கண்காணிப்பில் குடும்பத்தார் உள்ளிட்ட அவருடன் நேரடி தொடர்பைப் பேணியோர்

(எம்.மனோசித்ரா)

தென் ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட அபாயம் மிக்க 'ஒமிக்ரோன்' பிறழ்வு நேற்றையதினம் இலங்கையிலும் முதன்முறையாக இனங்காணப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து வருகை தந்த இலங்கை பெண்ணொருவரின் மாதிரியிலேயே 'ஒமிக்ரோன்' பிறழ்வு இனங்காணப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகை தந்த பின்னர் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதால் கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இப்பெண் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமையே தனது வசிப்பிடத்திற்குச் சென்றுள்ளார்.

இதன் காரணமாக அவரது குடும்பத்தார் உள்ளிட்ட அவருடன் நேரடி தொடர்பைப் பேணிய அனைவரது மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அத்தோடு இவ் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு விசேட கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தைச் சேர்ந்த யுவதி
'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ள யுவதி 25 வயதுடைய, மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறித்த யுவதி நவம்பர் 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த போது, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

வீடு திரும்பிய மறுநாள் 'ஒமிக்ரோன்' தொற்றுறுதி
குறித்த பெண் நைஜீரியாவிலிருந்தே வருகை தந்துள்ளார் என்பதோடு, எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவராவார் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இவர் எந்தவொரு தடுப்பூசியையும் பெறாதவர் என்பதால் விமான நிலையத்திலேயே பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போதே அவருக்கு தொற்றுறுதி செய்யபட்டுள்ளது.

குறித்த பெண் இலங்கைக்கு வருவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வருகை தராவிட்டாலும், மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்தமையால் விசேட கண்காணிப்பின் கீழ் கொவிட் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

தொற்று அறிகுறிகள் குறைவடைந்ததையடுத்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை குறித்த பெண் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டிலும் அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனவே அவரிடமிருந்து பாரதூரமானளவிற்கு 'ஒமிக்ரோன்' ஏனையோருக்கு பரவியிக்கக் கூடிய வாய்ப்புக்கள் குறைவாகும். அதற்காக யாருக்குமே பரவியிருக்காது என்றும் கூற முடியாது என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

32 நாடுகளில் பரவியுள்ள 'ஒமிக்ரோன்'
தென் ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானாவில் பீ.1.1.529 என்ற புதிய அபாயம் மிக்க கொவிட் பிறழ்வு கண்டறியப்பட்டது. தென் ஆபிரிக்காவில் கடந்த 24 ஆம் திகதி இந்த புதிய திரிபு இனங்காணப்பட்டது. முதலில் உறுதிப்படுத்தப்பட்ட பீ.1.1.529 தொற்று நவம்பர் 9 ஆம் திகதி சேகரிக்கப்பட்ட மாதிரியில் கண்டறியப்பட்டது.

அதனையடுத்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த பிறழ்வு 'ஒமிக்ரோன்' என்று அடையாளப்படுத்தப்பட்டு அபாயம் மிக்கதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இருவாரங்கள் என்ற மிகக்குறுகிய காலத்தில் இந்த பிறழ்வு இலங்கை உள்ளிட்ட 30 நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்கா, கனா, பிரித்தானியா, போஸ்ட்வானா, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஜேர்மன், ஹொங்கொங், கனடா, அவுஸ்திரேலியா, டென்மார்க், இத்தாலி, ஆஸ்திரியா, சுவீடன், தென் கொரியா, நைஜீரியா, சுவிசர்லாந்து, இஸ்ரேல், பிரேசில், ஜப்பான், பெல்ஜியம், ஸ்பெயின், நோர்வே, அமெரிக்கா, சவுதி, ஐயர்லாந்து, பிரான்ஸ், செசியா, ஐக்கிய அரபு இராச்சியம், பின்லாந்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி அவசியம்
தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்கு 'ஒமிக்ரோன்' தொற்று ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டால் பாரிய அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் இனியாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கட்டாயம் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

3 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்வதால் மாத்திரம் பாதுகாப்பு பெற முடியாது. முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment