(இராஜதுரை ஹஷான்)
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெயை சிங்கப்பூர் நாட்டில் இருந்து கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் மண்ணெண்யை வழமைக்கு மாறாக பெற்றுக் கொள்வதால் எதிர்வரும் நாட்களில் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெயை சிங்கப்பூர் நாட்டில் இருந்து கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 180 நாட்களுக்கு தேவையான மசகு எண்ணெயை 6 கட்டங்களாக பெற்றுக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய முதல் தொகை மசகு எண்ணெய் எதிர்வரும் மாதம் 23 அல்லது 24 ஆம் திகதி இறக்குமதி செய்யப்படும்.
தேசிய எரிபொருள் விநியோக கட்டமைப்பில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. எதிர்வரும் மாதம் முதல் எரிபொருள் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படும் என அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் கருத்துக்கள் அடிப்படையற்றவை.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து நுகர்வோர் மண்ணெண்ணெய் அதிகளவில் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிகிறது. இதனால் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் நிலை ஏற்படும் இருப்பினும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றார்.
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டுள்ளதால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த மாதம் 15ஆம் திகதி மூடப்பட்டு 22 நாட்களுக்கு பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பமானது.
மசகு எண்ணெய் கொள்வனவில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் மாதம் 3 ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூட நேரிடும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment