பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசாங்கம் எதற்கு ? : அமைச்சர் பந்துல குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தது - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, December 31, 2021

பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசாங்கம் எதற்கு ? : அமைச்சர் பந்துல குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தது - நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், உணவு பொருட்கள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் குறிப்பிடும் கருத்து வெறுக்கத்தக்கதாக உள்ளன. காலையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் இரவு நித்திரைக்கு செல்கிறார்கள். வெகுவிரைவில் பொதுமக்கள் வீதிக்கிறங்கி போராடுவார்கள் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைச்சின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் அரசாங்கம் எதற்கு. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், உணவு தட்டுப்பாடு குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிடும் கருத்துக்கள் வெறுக்கத்தக்கதாக காணப்படுகிறது.

சதொச விற்பனை நிலையத்தில் அனைத்து உணவு பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பொதுமக்கள் அதற்கு மாற்றீடாக கருத்துரைக்கிறார்கள். சதொச விற்பனை நிலையங்களிலும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன செல்லும் சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி காட்சிப்படுத்தப்படுகின்றன. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் பொதுமக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன பார்வையிட செல்லும் சதொச விற்பனை நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து பேக்கரி உணவு பொருட்களின் விலைகளும்,பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டன.

தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பால்மா உற்பத்தியிலான ஏனைய உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலையினை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் வர்த்தகத்துறை அமைச்சு, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை ஆகிய தரப்பினர் எதற்கு.

காலையில் எப்பொருளின் விலை அதிகரிக்கப்படும் என்ற அச்சத்தில் நடுத்தர மக்கள் இரவு நித்திரைக்கு செல்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள தற்போது வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெகுவிரைவில் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கிறங்குவார்கள்.நுகர்வோர் அதிகார சபை செயற்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment