மலையக கல்வி இந்திய நிதி உதவி சிபாரிசு அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்றுவரை இடம்பெறவில்லை : வி. இராதாகிருஷ்ணன் - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 1, 2021

மலையக கல்வி இந்திய நிதி உதவி சிபாரிசு அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்றுவரை இடம்பெறவில்லை : வி. இராதாகிருஷ்ணன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மலையக கல்வி அபிவிருத்திக்கு இந்திய நிதி உதவியில் 300 மில்லியன் ரூபா கடந்த 2017 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இவற்றில் ஒன்பது பாடசாலைகளுக்கான சிபாரிசு செய்திருந்தோம். ஆனால் இன்றுவரை இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் இடம்பெறவே இல்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிருஷ்ணன் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சுதந்திரத்தின் பின்னர் சிங்கள, வடக்கு கிழக்கு தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த கல்வி சுதந்திரம், மலையகத்திற்கு கிடைக்கவில்லை. காரணம் தோட்டங்களில் பாடசாலைகள் இருக்கவில்லை.

1978 ஆம் ஆண்டு காலத்தில்தான் தோட்ட பாடசாலைகள் அரசாங்கத்திற்கு பொறுப்பாகப்பட்டது. எனினும் கலவரங்கள், நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவிக்கொண்டே இருந்தது.

சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் காலத்தில் மலையக கல்வி முறைமை அபிவிருத்தி செய்யப்பட்டது. அதன் பின்னர் தற்போது வரையில் கல்வி விரிவாக்கம் ஏற்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. நல்லாட்சிக் காலத்திலும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. எனினும் ஆசிரியர் உதவியாளர் நியமனங்களில் பாரிய சிக்கல்கள் உள்ளன.

இன்றும் மத்திய மாகாணத்தில் 400 இற்கு அதிகமான உதவி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வுகள் கிடைக்கவில்லை. வெறும் 10 ஆயிரம் ரூபாவில் அவர்கள் இன்றும் சேவை செய்து வருகின்றனர்.

நல்லாட்சி காலத்தில்தான் 25 விஞ்ஞான பாடசாலைகள் உருவாக்கப்பட்டன, அதேபோல் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகவில்லை. அவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்று கொவிட் நெருக்கடி மற்றும் பணமில்லாத பிரச்சினை அரசாங்கத்திற்கு உள்ளதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனவே அரசாங்கத்தை நாம் குறை கூறவில்லை. ஆனால் இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

மேலும், மலையக கல்வி அபிவிருத்திக்கு இந்திய நிதி உதவியில் 300 மில்லியன் ரூபா கடந்த 2017 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. இவற்றில் ஒன்பது பாடசாலைகளுக்கான சிபாரிசு செய்திருந்தோம். ஆனால் இன்றுவரை இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் இடம்பெறவே இல்லை.

நாம் அடையாளப்படுத்திய ஒன்பது பாடசாலைகளும் ஆறு பாடசாலைகளாக குறைவடைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் மேலதிக நிலமும் எமது ஆட்சியில் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட அடிப்படை முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அதனை தாண்டிய எந்த முயற்சியும் இடம்பெறவில்லை. எனவே அதனை முன்னெடுக்க வேண்டும்.

பரீட்சை திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம் மற்றும் கல்வி அமைச்சிற்கும் இடையிலான தொடர்புகள் பலப்படுத்தப்பட வேண்டும். இதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment