திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சம்பந்தப்பட்ட சிறுமியை உடனடியாக கண்டுபிடிக்கவும், கடத்திய நபருக்கு கடுமையான தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி கடத்தப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும், குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்களிடம் கடத்தப்பட்டுள்ள சிறுமியின் சார்பாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தெலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக வினவினார்.
இதன்போது குறித்த சிறுமியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் உறவினர் ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் விரைவில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து சிறுமியை மீட்டுத்தருவதாக மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறியதாக, மனோ கணேசன் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவியொருவர் கடந்த 7 ஆம் திகதியன்று இரவு அக்கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய செல்வநாயகம் உதயன் என்பவரினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் 08 ஆம் திகதியன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் 20 நாட்களுக்கு மேலாகியும் குறித்த சிறுமியை பொலிஸார் இதுவரை கண்டுபிடித்து தரவில்லையென பெற்றோர் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமி கங்குவேலி அகத்தியர் வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி கற்று வந்தார்.
இச்சிறுமியை கடத்தியதாக கூறப்படும் செல்வநாயகம் உதயன் என்பவர் கடந்த வருடம் 13 வயதான இன்னுமொரு சிறுமியைக் கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு, இவ்வருடம் பெப்ரவரி மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் இன்னுமொரு சிறுமியை கடத்திச் சென்றிருப்பது கிராம மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
(கந்தளாய் நிருபர்)
No comments:
Post a Comment