இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது : அருட்தந்தை சிறில் காமினி அடிகளாரை அழைக்கழிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சஜித் பிரேமதாச - News View

About Us

About Us

Breaking

Monday, November 22, 2021

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது : அருட்தந்தை சிறில் காமினி அடிகளாரை அழைக்கழிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் - சஜித் பிரேமதாச

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

ஒரு நாடு ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் புதிய செயலணி அமைத்து ஒரு சமூகத்தை முற்றாக புறக்கணித்திருக்கின்றது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்ல முடியாது. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயற்படும் அருட்தந்தை சிறில் காமினி அடிகளாரை வாக்குமூலம் என்ற போர்வையில் அழைக்கழிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் சூழ்நிலைக்கு பின்னர் நாட்டில் புதிய வறுமை உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார முகாமைத்துவமே இந்த புதிய வறுமைக்கு காரணமாகியுள்ளது.

வருமான ரீதியான வறுமை, உணர்வு ரீதியான வறுமை, நாட்டில் பெரும்பாலானவர்கள் மந்த போசணை நிலை உருவாகி அதனால் ஏற்பட்டுள்ள வறுமை நிலை ஆகியன தற்போது தேசிய பிரச்சினையாகி உள்ளன.

எமது அரசாங்கத்தின் காலத்தில் உலக வங்கியானது ஜனசவிய திட்டத்திற்கு மட்டுமே நிதி வழங்கியது. இத்தகைய வேறு எந்த திட்டங்களுக்கும் அந்த வங்கி நிதி வழங்கியதில்லை. அந்தளவு அந்த திட்டம் மிக சிறப்பான வறுமை ஒழிப்புக்கான திட்டமாக இருந்தது.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் வருமானம் குறைவடைந்துள்ளது. வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை.

அடுத்த வருடத்துக்கு மொத்தமாக 6,721 மில்லியன் டொலர் கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. அடுத்து வரும் ஒன்றரை மாதத்துக்கே அந்நிய செலாவணி இருக்கின்றது. இவ்வாறான நிலையில் எவ்வாறு முகம்கொடுப்பது. மக்கள் தாங்க முடியாத பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு. மக்கள் பொருட்களை பெற்றுக் கொள்ள வரிசையில் நிட்க வேண்டிய நிலை, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நிலையான தீர்மானத்துக்கு வரவேண்டும். அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் தடுமாறிக் கொண்டிருக்காமல் விரைவாக எடுக்க வேண்டிய தீர்மானங்களுக்கு செல்ல வேண்டும்.

அதற்காக சர்வதேச நாணய நிதியங்களுடன் கலந்துரையாட வேண்டும். அதன்போது எமது தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எமது கடன்களை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும். அதற்காக நாங்களும் உதவ தயாராக இருக்கின்றோம்.

நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. அதனால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வரவு செலவு திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டயெழுப்ப நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் ஒரு நாடு ஒரு சட்டத்தை ஏற்படுத்துவதாக ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை மறைப்பதற்கு இனங்களுக்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஒரு நாடு ஒரு சட்டம் தொடர்பான செயலணியை அமைத்து ஒரு சமூகத்தை முற்றாக புறக்கணித்திருக்கின்றது. நாட்டுக்குள் பாரிய அழிவை ஏற்படுத்தவா அரசாங்கம் முயற்சிக்கின்றது. இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டு நாட்டை முன்னுக்கு செல்ல முடியாது.

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என இனங்காணும் வகையில் பேராயர் மற்றும் கத்தோலிக்க சமூகத்தின் சந்தேகத்தை தீர்க்கும் பாரபட்சமற்ற விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக செயற்படும் அருட்தந்தை சிறில் காமினி அடிகளாரை வாக்குமூலம் என்ற போர்வையில் அலைக்கழிப்பதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் இன்றைய தினமும் சிஐடி யினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதை மழுங்கடிக்கச் செய்யும் வகையிலேயே இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே இன்று நாட்டில் பெரும் நெருக்கடி நிலையும் சவால்களும் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இந்த நிலையில் அரசாங்கம் சரியானதில் நிலைத்திருக்க வேண்டும். உண்மைக்கு இடமளிக்க வேண்டும். புதிய வறுமையை விரைவாக ஒழிப்பதற்கு விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment