எனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் : பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மகன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 1, 2021

எனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் : பொலிஸ் அதிகாரி இளங்கோவனின் மகன் தெரிவிப்பு

கம்பளை வைத்தியசாலையின் நீர் தாங்கியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் இளங்கோவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரின் மகன் அபிநாத் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

பின்னர் குறிந்த நபர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருந்த சந்தர்ப்பத்தில் நெஞ்சுவலி என கடந்த மாதம் 8 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து காணாமல் போயிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்பளை கொத்மலை பூண்டுலோயா பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் 51 நாட்களின் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த வைத்தியசாலையின் நீர்த் தாங்கியிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் உருக்குலையாமல் இருந்தமை தெரியவந்தது.

மேற்படி சம்பவம் தொடர்பாக அவரது மகன் அபினாத் கருத்து தெரிவிக்கையில், தனது தந்தைக்கு வீட்டிலோ அல்லது தொழில் புரிந்த இடத்திலோ தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சிறிதளவேனும் பிரச்சினைகள் இருக்கவில்லை. அவர் எங்களுடன் சந்தோஷமாகவே இருந்தார்.

எனவே, இந்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக இராசாயன பரிசோதனைகளுக்காக சடலத்தின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த மரணம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர மேற்கொண்டார்.

அவருடன் கம்பளை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஸ்ரீயந்த பீரிஸ் உதவி பொலிஸ் பரிசோதகர் கமல் ஆரியவன்ச உட்பட்ட அதிகாரிகள் அதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

கண்டி நிருபர் ராஜ்

No comments:

Post a Comment