'ஒமிக்ரோன்' தொற்றின் தாக்கம் எவ்வாறானது? தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? இதுவரை கண்டறியப்படவில்லை : இலங்கைக்கு எவரும் வந்துள்ளனரா என விசாரணைகளை முன்னெடுப்பு என்கிறார் சுதர்ஷினி - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 30, 2021

'ஒமிக்ரோன்' தொற்றின் தாக்கம் எவ்வாறானது? தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா? இதுவரை கண்டறியப்படவில்லை : இலங்கைக்கு எவரும் வந்துள்ளனரா என விசாரணைகளை முன்னெடுப்பு என்கிறார் சுதர்ஷினி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

'ஒமிக்ரோன்' கொவிட்19 வைரஸ் தொற்றின் தாக்கம் எவ்வாறானது என்பது குறித்தோ அல்லது தடுப்பூசிகளுக்கு இந்த வைரஸ் கட்டுப்படுமா என்பது குறித்தோ இதுவரை கண்டறியப்படவில்லை என சபையில் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு எவரும் வந்துள்ளனரா என்ற விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற சுகாதாரத்துறை அமைச்சு மற்றும் மூன்று இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கொரோனா என்பது உலகளாவிய தொற்றுநோய், எத்தனை பிறழ்வுகள் ஏற்பட்டாலும் அதனை உடனடியாக தடுக்க முடியாது. அவ்வாறான நிலையில் 'ஒமிக்ரோன்' எனும் புதிய பிறழ்வு தற்போது 15 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ள போதிலும் நோய்த் தாக்கம், அதன் பரவும் வேகம், மரணங்களின் விளைவுகள் என்பன கண்டறியப்படவில்லை. டெல்டா வைரசே இன்னமும் மோசமான கொவிட்-19 வைரஸாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

'ஒமிக்ரோன்' வைரஸ் தொற்றானது ஏற்கனவே கொவிட் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மீண்டும் ஏற்படுமா அல்லது தடுப்பூசிகளுக்கு இது கட்டுப்படுமா என்பது கூட கண்டறியப்படவில்லை.

ஏற்கனவே கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கூட மீண்டும் 'ஒமிக்ரோன்' வைரஸ் தொற்றுக்கு உள்ளாகலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. ஆனால் தடுப்பூசி மூலம் கட்டுப்படுமா, தடுப்பூசி வெற்றியா இல்லையா என்பது குறித்து எதிர்வுகூற முடியாத நிலைமையே இப்போது காணப்படுகின்றது. இதுவரை இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏனைய வைரஸ் தொற்றை விட மாறுபட்ட தன்மைகளே காணப்படுவதாக கூறப்படுகின்றது.

எனவே தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு எவரும் வர முடியாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 14 நாட்களுக்கு முன்னர் குறித்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளரனா என்ற விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றோம்.

எது எவ்வாறு இருந்தாலும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் எனவும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் நிபுணர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். எனவே முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் இப்போதே கையாள வேண்டும் என சபையில் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment