ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சகல அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய சட்டமொன்றை கொண்டுவர தயாராக இருக்கின்றேன் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தனியார் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிப்பது மற்றும் வேலையை முடிவுறுத்துவது தொடர்பான இரு சட்டமூலங்களை சபைக்கு சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தாெடர்ந்து தெரிவிக்கையில், பண நெருக்கடி காரணமாக 55 வயதை 60 ஆக அதிகரிப்பதாக எதிரணி தெரிவித்தது. ஒவ்வொரு வருடமாக வயதெல்லை அதிகரிக்கப்படும்.
ஊழியருக்கு தேவையானால் 55 வயதிலோ அல்லது 56 வயதிலோ கூட ஓய்வு பெற முடியும். முன்னேறிய நாடுகளில் ஓய்வு பெறும் வயது அதிகமாகும். ஊழியர்களின் கோரிக்கை படியே வயதெல்லை அதிகரிக்கப்படுகிறது.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் 13 தடவைகள் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. தொழிற்சங்கங்களுக்கிடையே உடன்பாடு ஏற்படாததாலே ஒப்பந்தம் நடைபெறவில்லை.
சம்பள நிர்ணய கட்டளை சட்டத்தில் கை வைக்க முடியாது. அத்துடன் குறைந்தபட்ச சம்பள சட்டத்தை மாற்றினால் ஏனைய தொழில்களுக்கும் 1000 ரூபா வழங்க நேரும். இதனால் கைத்தொழில்கள் வீழ்ச்சி அடையும்.
தோட்டத் தொழிலாளர் சம்பளம் தொடர்பில் வழக்கு உள்ளது. வழக்கு தீர்ப்பின் பின்னர் சகல கட்சிகளையும் அழைத்து ஆராய்ந்து புதிய சட்டம் தேவையாயின் தோட்ட மக்களுக்காக அதனை கொண்டு வந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்போம்.
தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டல் புலிகள் தாக்குதலின் போது நஷ்ட ஈடு வழங்குவது குறித்து ஆராயப்படும். தேவையான சட்டங்கள் அமுல்படுத்தப்படும்.
இலங்கையில் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தனியார் துறை ஓய்வு வயது தொடர்பில் எந்த சட்ட ஏற்பாடும் கிடையாது. பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் வயதை 60 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்தது என்றார்.
No comments:
Post a Comment