இரசாயன உரத்திற்கான தடை நீக்கம், இன்று முதல் தனியார் துறையினருக்கு இறக்குமதி செய்ய அனுமதி : அம்பாறை சரணாலயத்தின் புதிய எல்லையை பிரகடனப்படுத்தல் : ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் ஒழுக்க விதிகளைத் தயாரித்தல் : தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு கம்பனியொன்றை நிறுவுதல் : மத்தியஸ்த சட்டத்தை திருத்தம் செய்தல் - இவ்வார அமைச்சரவையில் 15 தீர்மானங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 24, 2021

இரசாயன உரத்திற்கான தடை நீக்கம், இன்று முதல் தனியார் துறையினருக்கு இறக்குமதி செய்ய அனுமதி : அம்பாறை சரணாலயத்தின் புதிய எல்லையை பிரகடனப்படுத்தல் : ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் ஒழுக்க விதிகளைத் தயாரித்தல் : தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு கம்பனியொன்றை நிறுவுதல் : மத்தியஸ்த சட்டத்தை திருத்தம் செய்தல் - இவ்வார அமைச்சரவையில் 15 தீர்மானங்கள்

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியை சுமார் 7 மாதங்களின் பின்னர் இரத்து செய்வதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே அறிவித்துள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய இரசாயன உரங்கள், களை கொல்லிகள் மற்றும் பீடைகொல்லிகளை இறக்குமதி செய்ய இன்று (24) முதல் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம் (24) வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆயினும்  அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றமில்லையெனவும், அரசாங்கத்தின் கொள்கை பசுமை விவசாயமே எனவும், சேதன விவசாயத்திற்கு மாத்திரமே நிவாரணங்கள் வழங்கப்படுமெனவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலைகளில் அரசாங்க பாடசாலைகள் காணப்பட்ட போதிலும் தனியார் பாடசாலகளில் கல்வி கற்பதற்கான அனுமதி உள்ளது போல், திறந்த சந்தையில் இரசாயன உரங்கள், இரசாயன களைகொல்லிகள், இரசாயன பீடைகொல்லிகளை கொள்வனவு செய்யவும் அனுமதி வழங்கப்படுவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

1. அம்பாறை சரணாலயத்தின் புதிய எல்லையை பிரகடனப்படுத்தல்

9,323.96 ஹெக்டயார்களுடன் கூடிய நிலப்பரப்பைக் கொண்ட கல்ஓயா வடகீழ் தாழ்நில சரணாலயம் எனப்படும் அம்பாறை சரணாலயம், 1954 ஆம் ஆண்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சரணாயலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் கல்ஓயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் நகர மையமாக நிறுவப்பட்ட அம்பாறை நகரம் தற்போது விரிவாக அபிவிருத்தியடைந்துள்ளது.

நகர சபை விளையாட்டு மைதானங்கள், விகாரைகள் போன்ற அரச மற்றும் அரசாங்கத்துடன் இணைந்த பல்வேறு பொது வசதிகளுக்காக சரணாலயம் அமைந்துள்ள காணிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையால், ஒருசில அரச காணித்துண்டுகள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தனியார் துறையினருக்கு வழங்கி அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதால் அம்பாறை நகரத்திட்டமிடல் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையை அடையாளங் கண்டுள்ள காணித்துண்டுகளை சரணாலயத்திலிருந்து நீக்கி புதிய எல்லைகளைப் பிரகடனப்படுத்துவதற்காக 2009 மே மாதம் 20 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய அம்பாறை நகரத்திட்டமிடலுக்குரிய காணிகளை அடையாளங் காணப்பட்டுள்ள இயற்கை வனத்துடன் கூடியதும், தொடர்ந்து யானைகள் மற்றும் ஏனைய விலங்குகள் நடமாடும் பகுதிகளைத் தொடர்ச்சியாக சரணாலய வலயமாகப் பேணுவதற்கும், அதற்குரிய 46.18 ஹெக்ரயார்கள் சன அடர்த்தியுடன் கூடியதும் அபிவிருத்தி செய்யப்பட்டதுமான பகுதியை சரணாலய வளாகத்திலிருந்து நீக்கி வெளியிடுவதற்கும், புதிய எல்லைகளை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கை வகுப்புக்கள், ஒழுக்க விதிகளைத் தயாரித்தல்

வெகுசன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் துறையின் உலகளாவிய வளர்ச்சியை கருத்தில் கொண்டு இலங்கையில் ஊடகங்களைத் தரப்படுத்துவதற்காக காணப்படும் கட்டளைச் சட்டங்கள், சர்வதேச கட்டளைச் சட்டங்கள், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களின் செயற்பாடு மற்றும் சமூக, கலாச்சார தனித்துவங்கள் போன்ற துறைகளில் விசேட கவனத்தைச் செலுத்தி இலங்கைக்கான வெகுசன ஊடக கொள்கையொன்றை தயாரித்தல், அதற்கு இணையாக உயரிய தொழில்வாண்மையுடன் கூடிய ஊடக தொழில் வல்லுநர்களை உருவாக்கத் தேவையான பின்னணியை உருவாக்கல், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட புதிய ஊடகங்களைப் பயன்படுத்தல் மற்றும் நடத்தைகள் தொடர்பான அறிவு, புரிதல் மற்றும் தொடர்பான உத்திகளை சமூகமயப்படுத்தல், டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு இசைவாக்கமடைதல் போன்றவற்றுக்குத் தேவையான வசதியளித்தல் தொடர்பாக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதற்காக சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் ஊடகவியலாளர்களுக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஏற்புடையதாகக் காணப்படும் சட்டத் திருத்தங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும் ஒழுக்கவிதிகளைத் தயாரிக்க வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அரச மற்றும் தனியார் துறை ஊடகங்கள், சந்தைப்படுத்தல், கல்வி ரீதியான, சட்டங்கள், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவம் வாய்ந்த நபர்களின் பிரதிநிதித்துவத்துடனான குழுவொன்றை நியமிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணங்களை அறவிடல் LANKAQR ஊடாக டிஜிட்டல் மயப்படுத்தல்

இலங்கையில் திரவப்பணத்தைப் பயன்படுத்தலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கத்தால் LANKAQR கட்டணம் செலுத்தல் முறையைப் விரிவாக்குவதற்காக அனைத்து அனுமதிபெற்ற நிதி நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

அதன் ஒரு படிமுறையாக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைகளில் திரவப்பணத்தின் மூலம் கட்டணம் செலுத்தும் நுழைவாயில்களில் LANKAQR கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. தத்தமது கைத்தொலைபேசியில் குறித்த தொகையைக் குறித்துக்கொண்டு எந்தவொரு வங்கியின் நிகழ்நிலை நடமாடும் கட்டண செயலி மூலம் கட்டணங்களை அறவிடுவதற்கு நுழைவாயிலில் காணப்படும் ஞசு குறியீட்டை அலகீடு (Scan) செய்வதன் மூலம் 8-10 செக்கன்களில் குறித்த கட்டணத்தை செலுத்துவதற்கு, அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு இயலுமை கிட்டும்.

அதற்கமைய, குறித்த செலுத்தல் முறையை அமுலாக்குவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. தேசிய மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தரவுத் தொகுதியை மேம்படுத்தல் மற்றும் இயலளவை அதிகரித்தல்

வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்துள்ளமையால் நெடுஞ்சாலைகளில், குறிப்பாக கொழும்பு நகரத்தில் காணப்படும் வீதிகளில் மோட்டார் வாகன முகாமைத்துவத்திற்காக பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. அதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தற்போது காணப்படுகின்ற தரவுகளை இற்றைப்படுத்துவதற்காக கொரியா சர்வதேச ஒத்தழைப்புக்கள் நிறுவனத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகள் அமைச்சு தேசிய ரீதியாக மோட்டார் வாகன போக்குவரத்து தரவுகள் முகாமைத்துவத் திட்டமொன்றை தயாரிப்பதற்கும், மோட்டார் வாகன தரவுகளைத் திரட்டுவதற்கான அடிப்படையொன்றை உருவாக்குவதற்கும், தன்னியக்க மோட்டார் வாகனத் தரவுத்தொகுதிக்கான முகாமைத்துவத் தொகுதியை உருவாக்குவதற்கும், மோட்டார் வாகனப் போக்குவரத்து கேள்விப் பகுப்பாய்வை மேற்கொள்ளும் ஆற்றலை அதிகரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்காக கொரியா சர்வதேச ஒத்துழைப்புக்கள் நிறுவனத்தின் சேவையை ஏற்பாடு செய்துகொண்டு 'தேசிய மோட்டார் வாகனப் போக்குவரத்துத் தரவுத்தொகுதியை மேம்படுத்தல் மற்றும் இயலளவை அதிகரிக்கும் கருத்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்காகவும் குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்துகொண்டு கொரியா சர்வதேச ஒத்துழைப்புக்கள் நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையேயான கலந்துரையாடல் அறிக்கையில் கையொப்பமிடுவதற்காக நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. இலங்கை மற்றும் வியட்நாமிற்கிடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தம்

இலங்கை அரசாங்கத்திற்கும், வியட்நாம் அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல் தொடரின் பிரதிபலனாக இரு நாடுகளுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்புக்கள் மற்றும் பரஸ்பர நிர்வாக ஒத்துழைப்புக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, வர்த்தகக் கொடுக்கல் வாங்கலில் செலவுகளைக் குறைத்தல், தேச எல்லைகள் தொடர்பான வரிகளை சரியான வகையில் கணிப்பீடு செய்தல் மற்றும் திரட்டுதல், மட்டுப்பாடுகளுக்குட்பட்ட பொருட்களை பரிமாற்றுதலை தடை செய்தல், மட்டுப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான ஒழுங்கு விதிகளை விதித்தல் போன்றவற்றுக்காக குறித்த முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக உடன்படிக்கை பங்களிப்புச் செய்யும். அதற்கமைய, இருதரப்பினரால் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ள முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. தேசிய பெற்றோலிய மற்றும் இயற்கை வாயு கம்பனியொன்றை நிறுவுதல்

2011 தொடக்கம் 2013 வரைக்குமான காலப்பகுதியில் மன்னார் அகழி ஆ2 நிலப்பரப்பின் ஒரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கமைய, எமது நாட்டில் பெற்றோலிய மற்றும் இயற்கை வாயுப் படிமம் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோலியப் பொருட்கள் மற்றும் இயற்கை வாயுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் உள்ளூர் தேவைகளுக்கு சுவட்டு எரிபொருட்களின் நிறுவனங்கள் மீது தங்கியிருக்கும் நிலையைக் குறிப்பதற்கும், எதிர்காலத்தில் இயற்கை வாயு ஏற்றுமதியாளராக மாறுவதன் மூலம் அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்புக் கிடைக்கும்.

வர்த்தக ரீதியான சாத்திய வளங்களுடன் கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இயலுமை கிடைக்கும் வகையில் உள்ளூர் வாயு ஆராய்ச்சி மற்றும் உற்பத்திகள் உள்ளடங்கலாக, களஞ்சியப்படுத்தல், குழாய்களைப் பொருத்துதல், போக்குவரத்து மற்றும் விநியோகத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், உரிமம் மற்றும் தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்குரிய அரச – தனியார் பங்குடமையின் கீழ் தேசிய வாயுக்கள் கம்பனியொன்றை அரசாங்கத்தால் நிறுவுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுமென 'இலங்கையில் இயற்கை வாயுக்கள் தொடர்பான தேசிய கொள்ளைப் பிரகடனத்தின்' மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கம்பனியின் நிர்வாகக் கம்பனியாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த கம்பனிக்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் ஏ ஆம் பகுதியின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.

அதற்கமைய, 2007 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் 'தேசிய பெற்றோலிய மற்றும் வாயுக்கள் கம்பனியை நிறுவுவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்டோகரன்சி (Crypto Currency) தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பித்தல்

டிஜிட்டல் வங்கி முறைமை, ப்லொக்செயின் (Block chain) தொழிநுட்பம் மற்றும் க்ரிப்ரோகரன்சி (Crypto Currency) தொடர்பான கம்பனிகளுக்கு முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதற்காக விதிக்கக்கூடிய சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக அமைச்சரவைக்குப் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்காக 2021 ஒக்ரோபர் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுஜீவ முதலிகே அவர்களின் தலைமையில் 08 உறுப்பினர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வரும் வகையில் இக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் இறுதி அறிக்கையினை 2022 யூன் மாதம் 30 ஆம் திகதி ஆகும் போது சமர்ப்பிப்பதற்கும், குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக குறித்த துறைகளில் செயலாற்றும் தொழிநுட்ப வல்லுநர்கள் இருவரை உறுப்பினர்களாக நியமிப்பதற்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் யோசனை தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

8. 2021 ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டு வரைக்கும் பாரியளவிலான அபிவிருத்திக் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றங்கள்

2021 ஆம் ஆண்டில் 47 அமைச்சின் கீழ் 1,000 மில்லியன் ரூபாய்களுக்கான 332 கருத்திட்டங்கள் பாரியளவிலான கருத்திட்டங்களாக அமைவதுடன், அவற்றுக்கான காலப்பகுதி 2030 ஆண்டாகவும் உள்ளது. இக்கருத்திட்டங்களின் மொத்த முதலீட்டுத் தொகை 6,899 பில்லியன் ரூபாய்களாகும். அவற்றில் 2,642 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான 95 கருத்திட்டங்கள் 'சுபீட்சத்தின் நோக்கு' அரச அபிவிருத்திக் கொள்கைப் பிரகடனத்தின் இலக்குகளை அடைவதற்காக 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கருத்திட்டங்களாகும்.

அதன் கீழ் சுகாதாரம், கல்வி, குடிநீர் விநியோகம், வீதித் தொடர்புகள் அபிவிருத்தி, நீர்பாசனத் தொகுதியை மேம்படுத்தல் மற்றும் கிராமிய நகர அபிவிருத்தி போன்ற துறைகளில் கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவுகின்ற கொவிட் 19 பெருந்தொற்று நிலைமையால் கட்டிடப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்கள் பற்றாக்குறை, இறக்குமதிக் கட்டுப்பாடு, குடிவரவு மற்றும் குடியகல்வு மட்டுப்பாடுகள் போன்றவற்றால் இக்கருத்திட்டங்கள் தொடர்ச்சியான செயற்பாடுகளில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

எனினும், குறித்த காலாண்டில் 448 பில்லியன் ரூபாய்களை இலக்காகக் கொண்ட செலவுகளில் 63% வீதமான தொகைக்குரிய கருத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளன.

குறித்த கருத்திட்ட இலக்காகக் கொண்ட காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தி அவற்றின் அனுகூலங்களை பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய வகையில், குறித்த கருத்திட்டங்கள் தொடர்பாக மேலெழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாதாந்தம் நடாத்தப்படும் மீளாய்வுக் குழுக் கூட்டத்தில் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. பசுமை எரிசக்தி அபிவிருத்தி மற்றும் எரிசக்தியின் வினைத்திறனை அதிகரிப்பதற்கான கருத்திட்டம் - அம்பலாங்கொட மற்றும் பன்னலவில் அமைந்துள்ள உப மின் நிலையங்களை மேம்படுத்தல்

ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் பசுமை எரிசக்தி மற்றும் எரிசக்தியின் வினைத்திறனை அதிகரிப்பதற்கான கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், குறித்த கருத்திட்டத்தில் 8 பக்கேஜ் லொட் - டீ இன் கீழ் அம்பலாங்கொட மற்றும் பன்னலவில் அமைந்துள்ள உப மின் நிலையங்களை மேம்படுத்துவதற்கும் மேலதிக மின்மாற்றி 2 இனை விநியோகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக தனியொரு கட்டமாக இரட்டை ரக முறையின் கீழ் தேசிய போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், 04 போட்டி விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய குறித்த ஒப்பந்தத்தை சிலக்ஸ் இன்ஜினியரிங்; தனியார் கம்பனிக்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் பெல்வத்த மற்றும் செவனகல அலகுககளில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரண்டு (02) சுற்றாடல் நேய உயிர்ம சேதன உரத் தயாரிப்புக் கூடங்களுக்கான இயந்திரத் தொகுதியை கொள்வனவு செய்தல்

வரையறுக்கப்பட்ட லங்கா சீனி (தனியார்) கம்பனியின் பெல்வத்த மற்றும் செவனகல அலகுககளில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இரண்டு (02) சுற்றாடல் நேய உயிர்ம சேதன உரத் தயாரிப்புக் கூடங்களுக்கான இயந்திரத்தொகுதியை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, 2021 செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள உயிர்ம சேதன உரத் தயாரிப்புக் கூடங்கள் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படாமையால், அதற்குத் தேவையான இயந்திர தொகுதி உபகரணங்களை, இயந்திரங்களைத் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் கொள்வனவு செய்யப்பட வேண்டியுள்ளது.

அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள சீனாவின் Dondting Lake International கம்பனிக்கு குறித்த இயந்திரத் தொகுதி உபகரணங்களை நேரடி பெறுகை முறைமையைப் பின்பற்றி விநியோகிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்குக் கொள்கலன் முனையத்திற்குத் தேவையான தொழிற்பாட்டு உபகரணங்களுக்கான பெறுகை

இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு முனையத்திற்கான கப்பலில் இருந்து தரைக்கு தொழிற்படும் 14 பாரந்தூக்கிகள், தண்டவாளத்தில் பொருத்தி தொழிற்படும் 40 தன்னியக்க சுமைதாங்கிகள் மற்றும் கொள்கலன்கள் ஏற்றிச் செல்லும் 30 வாகனங்கள் பெறுகைக்காக 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையைப் பின்பற்றி போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், 06 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, பெறுகை ஆட்சேபனை சபையின் பரிந்துரைக்கமைய கப்பலில் இருந்து தரைக்கு தொழிற்படும் 12 பாரந்தூக்கிகள், தண்டவாளத்தில் பொருத்தி தொழிற்படும் 40 தன்னியக்க சுமைதாங்கிகளுக்கான பெறுகையை, ஷன்ஹாயி ஷென்ஹூவா ஹெவி கம்பனிக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. கொழும்பு துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் - II ஆம் கட்டம் - சிவில் வேலைகள்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் முழுமையாக இயக்கப்படும் முனையமான கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்காக, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் II ஆம் கட்டத்தின் சிவில் வேலைகளுக்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதடன், 03 விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த விலைமுறிகள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த ஒப்பந்தம் அக்ஷன் இன்ஜினியரிங் கம்பனி மற்றும் சயினா ஹாபர் இன்ஜினியரிங் கம்பனி லிமிட்டட் கூட்டு வணிகத்திற்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

உள்ளூர் அரிசித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும், சந்தையில் நிலவும் அரிசித் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கும் பொதுமக்களுக்குத் தேவையான அரிசியை தட்டுப்பாடுகளின்றி இலகு விலையில் விநியோகிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக 1969 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் விதிக்கப்பட்டு 2021 நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த ஒழுங்கு விதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. 2003 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையான பிணக்குகள்) சட்டத்தை திருத்தம் செய்தல்

பிணக்குகளை தீர்ப்பதற்காக மத்தியஸ்த்தம் செய்வதற்கான வசதியளித்தல் மற்றும் குறைந்த செலவுப் பொறிமுறையாக தற்போது இலங்கையில் பரந்த வரவேற்பு கிடைத்துள்ளது. சமூகத்தின் மேம்பாட்டுக்காக விசேடமான நிபுணத்துவத்துடனும் அர்த்தமுள்ள தீர்வுகள் தேவையான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளாகக் கருதப்படும் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகள் 2003 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையான பிணக்குகள்) சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.

பிணக்கின் தன்மை மற்றும் வகையை கருத்தில் கொண்டு விசேட தகைமைகளுடன் கூடிய மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கு குறித்த சட்டத்தின் மூலம் நீதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் சில ஏற்பாடுகள் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கான அவசியம் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய நீதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற குடியியல் சட்ட மறுசீரமைப்பு உபகுழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளின் பிரகாரம் 2003 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையான பிணக்குகள்) சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கும், அதற்காக திருத்தப்பட்ட சட்டமூலத்தை தயாரிப்பதற்க சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. 1988 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டம் (திருத்தப்பட்டவாறான) திருத்தம் செய்தல்

1988 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அதிகமான பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கியதாக மத்தியஸ்த்த சபை இயங்கி வருகின்றது. குறித்த மத்தியஸ்த செயன்முறையை மேலும் வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் நீதி அமைச்சின் கீழ் இயங்குகின்ற குடியியல் சட்ட மறுசீரமைப்பு உபகுழுவால் அடையாளங் கண்டுள்ளது.

அதற்கமைய குறித்த திருத்தங்களை உள்வாங்கி 1988 ஆம் ஆண்டு 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபை சட்டத்தை திருத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment