பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு - News View

About Us

About Us

Breaking

Friday, October 1, 2021

பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள ஊடக வழிமுறைகளை மீறும் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை குறித்த ஆணைக்குழுவுக்கே வழங்குமாறு அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் தெரிவித்தார்.

தேர்தல் காலத்தில் வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு உரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பல்வேறு காரணங்களினால் தொடர்ச்சியாக காலதாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர், சபை முதல்வர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

தற்பொழுது நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் காணப்படும் வேட்பாளர்களின் வைப்புப் பணத்தை இரத்துச் செய்யும் நடைமுறை விரிவான திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்ற விசேட குழுவில் சுட்டிக்காட்டியது.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு நடமாடும் வாக்களிக்கும் முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும், பார்வையற்றவர்கள் ப்ரெயில் முறையின் கீழ் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பணியாளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வேட்புமனுக்களைக் கையளிக்கும்போதே சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்தும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தேர்தல் நடத்தை விதி சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இலத்திரனியல் வாக்கு எண்ணும் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது ஆணைக்குழுவின் நிலைப்பாடாக இருந்ததுடன், வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுவது நடைமுறைச்சாத்தியமானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நபருடைய பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படும் சம்பவங்கள் குறித்து பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தேர்தல் காலத்தில் இடம்பெறுகின்ற வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் நீதியான மற்றும் சுதந்திரமான தேர்தல்களுக்குத் தடையாக உள்ளது என்றும் ஆணைக்குழு, பாராளுமன்ற விசேட குழுவிடம் தெரிவித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியொன்று வெற்றிடமாகும்போது இடைத் தேர்தல் ஒன்றின் மூலம் அந்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பிலும் பாராளுமன்ற விசேட குழு கலந்துரையாடியது.

பாராளுமன்ற விசேட குழுக் கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ.சுமந்திரன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அடுத்த கூட்டம் எதிர்வரும் 07ஆம் திகதி நடைபெறும் என இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.

No comments:

Post a Comment