எதிர்பார்க்கும் விவசாயப் பொருளாதார நன்மைகளை அடைய நெனோ நைட்ரஜன் பசளை பற்றிய போதிய வழிகாட்டல்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அது சுற்றாடலுக்கு தீங்கு பயக்காத போதும் எதிர்பாத்த இலக்கையடைய முடியாது போகலாம் என இலங்கை விவசாய சேவையின் விவசாயப் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்தது.
கண்டி, கெண்டியன் ஆர்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
மேற்படி அமைப்பின் தலைவர் எம்.சீ. ஜயசிங்க இது பற்றி மேலும் தெரிவித்ததாவது, அரசினால் மேற்கொள்ளும் இப்பணிக்கு எமது பூரண ஒத்துழைப்பு உண்டு. ஆனால் விவசாயம் தொடர்பான ஜனாதிபதி விசேட செயலணியில் உள்ள சிலர் போதிய விளக்கம் இல்லாத காரணத்தால் தவறான வழிகாட்டலால் நாடு பாதிக்காது தடுப்பது எமது பொறுப்பாகும். அந்தவகையில் எமது கருத்துக்களை முன்வைக்க உள்ளோம்.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள நெனோ நைட்ரஜன் பற்றிய கள ஆய்வு முடிவுகள் பற்றி போதிய தெளிவுகள் இல்லை. அதே நேரம் ஏற்றுமதி செய்கின்ற கம்பனிகளின் வழிகாட்டல்கள் மட்டும் உள்ளன. எனவே எடுத்த எடுப்பில் அதனை பயன்படுத்தாது ஆய்வுகளுக்கு மத்தியில் பயன்படுத்துவதே மிகச் சிறந்தது.
மேலும் நெனோ நைட்ரஜன் என்பது தாவரத்தின் மேற்பரப்பிற்கு விசிறப்பட வேண்டிய ஒரு திரவம். எனவே தாவரத்தின் இலைகள் நன்கு வளர்ச்சியடைந்த நிலையிலே அது விசிறப்பட வேண்டும். அதேநேரம் இலைகள் நன்கு வளர்ச்சியடைய நைட்ரஜன் தேவை. எனவே அதனை எப்படி ஏற்கனவே வழங்குவது என்ற வழிகாட்டல் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேலும் ஒரு தாவரம் மொத்த நைட்ரஜன் தேவையின் 90 சதவீதத்தை வேர்களும், இலைகள் 10 சதவீதமும் உள் எடுத்துக் கொள்ளும். எனவே ஒரு தாவரத்திற்கு தேவையான மொத்த நைட்ரஜனின் அளவில் 10 வீதத்ததை வழங்குவதற்கு பாரிய செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும். பல முறை விசிற வேண்டி வரும். அதற்கான செலவுகள் பயிற்சி உபகரணம் என்பன தேவைப்படும். அது மட்டுமல்ல அதனை கலக்க வேண்டிய விகிதாசாரம், எமது சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விதந்துரைக்கப்பட வேண்டும். அதற்கான கால அவகாசம் போதாது.
எனவே எடுத்த எடுப்பில் நெனோ நைட்ரஜன் பசளை பாவிக்க அனுமதிக்காது போதிய கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அக்குறணை நிருபர்
No comments:
Post a Comment