மட்டக்குளி பெண் கிராம உத்தியோகத்தரின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மட்டக்குளி இராணுவ முகாமின் லெப்டினன்ட் கேர்ணல் உள்ளிட்ட 15 சந்தேகநபர்களுக்கும் ஒக்டோபர் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
தொட்டலங்க எல்லே விளையாட்டு கழகத்தின் விளையாட்டு அணியின் தலைவரான 36 வயதான, மூன்று பிள்ளைகளின் தந்தையான அருண சம்பத் ரத்னசிறி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில், மரணமடைந்த நபரின் மனைவியான கிராம அலுவலர், மட்டக்குளி இராணுவ முகாமின் இராணுவ லெப்டினன்ட் கேர்ணல் மற்றும் குறித்த முகாமிலுள்ள 13 பேர் ஆகிய பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிரதான சந்தேகநபரான லெப்டினன்ட கேர்ணலே இக்கொலையை திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக மட்டக்குளிய பொலிஸார் கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மரணித்த நபரின் மனைவியின் தகாத உறவு காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மரணமடைந்த நபர் கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி இராணுவ முகாமுக்கு சொந்தமான கெப் வாகனமொன்றில் கடத்தப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமது கணவரைக் காணவில்லையென மட்டக்குளி - சமித்புர கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றிவரும் மரணித்த அகில சம்பத்தின் மனைவி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஒகஸ்ட் 20ஆம் திகதி முகத்துவாரம் - காக்கைத்தீவு கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டிருந்த நிலையில், அது பின்னர் எல்லே விளையாட்டு வீரரான அகில சம்பத்துடையது என அடையாளம் காணப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு - வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு வடக்கு பொலிஸ் பணியகம் என்பன விசாரணைகளை முன்னெடுத்தது.
இவ்விசாரணைகளுக்கமைவாக முதலில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த இராணுவ அதிகாரி உள்ளிட்டோரால் தமது கணவர் கொலை செய்யப்பட்டதாக அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பத்துடன் தொடர்புடைய 15 பேரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
குறித்த நபர் கடத்தப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, சேதவத்த கறுப்பு பாலத்திலிருந்து களனி கங்கையில் வீசப்பட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment