(எம்.மனோசித்ரா)
நாட்டில் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய தெமட்டகொட ருவன் எனப்படும் சிறிநாயக்க பத்திரணலாகே ருவன் சமில பிரசன்ன என்ற சந்தேகநபர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து பல இலட்சக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்தமைக்கமைய சில நபரகள் வெவ்வேறு வழிகளில் பணத்தை சேமித்துள்ளமை தொடர்பில் தெரியவந்தது. புலனாய்வு பிரிவினரால் இது தொடர்பில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய இது தொடர்பில் விசேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகத்தின் கீழ் சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான புதிய விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.
அதற்கமைய கடந்த மார்ச் மாதம் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தொடர்பில் மேற்கூறப்பட்ட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய அவரிடம் காணப்பட்ட சொத்துக்கள் சட்டவிரோதமான சேர்க்கப்பட்டவை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி இந்தியாவில் இந்திய கடற்படையினரால் இலங்கையின் படகொன்றில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த படகில் காணப்பட்ட செய்மதி தொலைபேசி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இலங்கையிலுள்ள நபரொருவருக்கு குறித்த ஹெரோயின் தொகையுடன் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த ருவன் என்ற நபர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் இதுபோன்ற மேலும் பல வர்த்தக நடவடிக்கைகளுடனும், குறிப்பாக போதைப் பொருள் வியாபாரத்துடனும், கொலை சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
சிறிநாயக்க பத்திரணலாகே ருவன் சமில பிரசன்ன என்ற தெமட்டகொட ருவன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர் 2017 இல் 280 கிலோ கிராம் ஹெரோயின், அதே வருடத்தில் 40 கிலோ கிராம் ஹெரோயின், 2018 இல் 200 கிலோ கிராம் ஹெரோயின், 200 கிலோ கிராம் ஐஸ், 2019 இல் 200 கிலோ கிராம் ஹெரோயின், 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாண்டின் 21 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருள் இவரால் இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளது. இதே ஆண்டில் இந்தியாவிலிருந்து 340 கிலோ கிராம் ஹெரோயினை இலங்ககைக்கு கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறான போதைப் பொருள் கடத்தல் மூலம் குறித்த சந்தேகநபரால் 700 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வாகனம், 300 இலட்சம் பெறுமதியுடைய ஜீப் வாகனம், 330 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய பி.எம்.டபிள்யு கார், 480 இலட்சம் பெறுமதியுடைய பி.எம்.டபிள்யு ஐ.8 ரக கார் என்பன குறித்த பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த சந்தேகநபரின் வீட்டிலிருந்து 1 கிலோ 590 கிராம் தங்கம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவரிடம் மேலும் வீடு, காணிகள், வாகனங்கள் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூகத்திலுள்ள இவ்வாறான நபர்கள் தொடர்பில் சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான பொலிஸ் பிரிவினரால் பண சுத்தீகரிப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment