(ஆர்.யசி)
இலங்கையில் கொவிட் மரணங்களானது 19 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவை விடவும் மோசமான நிலையில் அபாயகரமான கட்டத்தில் இலங்கை உள்ளதாகவும், தெற்காசியாவில் கொவிட் வைரஸ் தாக்கத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார வைத்திய நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தூரநோக்குத் திட்டங்களை விடவும் மக்களை பாதுகாக்க உடனடி தீர்மானங்களை இப்போது முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தெற்காசிய வலயத்திற்கான கொவிட் நிலைமைகள் குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தனது அறிக்கையை முன்வைத்துள்ள நிலையில், சுகாதார தரப்பினர் அறிக்கை குறித்தும் இலங்கையில் நிலைமைகள் குறித்தும் கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வு மையத்தின் பணிப்பாளர்பேராசிரியர் நீலிகா மளவிகே கூறுகையில்,
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுக் குழுவுடன் இணைந்து இலங்கையின் வைத்திய நிபுணர்கள் 15 பேர் ஆய்வு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றோம்.
ஏற்கனவே இணைந்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது உலக சுகாதார ஸ்தாபனம் புதிய அறிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.
இதில் இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவிக்கையில், கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14,000 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இலங்கை இந்தியாவின் மரண வீத அதிகரிப்பினால் மிக மோசமான பதிவுகள் பதிவாகியுள்ளன.
எனவே நிலைமைகளை கட்டுப்படுத்த துரிதமான, அதேபோல் கடுமையான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இப்போதும் நாம் ஆபத்தான கட்டத்தில் உள்ளோம் என்பதை ஏற்றுக் கொண்டு தற்போது வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.
இப்போது நீண்ட கால தூரநோக்கு திட்டங்களை ஆராய்ந்து கொண்டிருக்காது மக்களை காப்பாற்றும் தீர்மானங்கள் எடுப்பதே முக்கியம்.
ஆசியாவில் மிக மோசமான வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை அடையாளபடுத்தப்படுகின்றது என்பதை மனதில் வைத்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment