அங்கஜன் எம்.பியின் பணிப்பிற்கு அமைய சங்குப்பிட்டி பாலத்தின் சேதமுற்ற பகுதிகள் சீரமைப்பு : மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்கிறார் உதவிப் பணிப்பாளர் டீ.வசந்தகுமார் - News View

About Us

About Us

Breaking

Monday, September 6, 2021

அங்கஜன் எம்.பியின் பணிப்பிற்கு அமைய சங்குப்பிட்டி பாலத்தின் சேதமுற்ற பகுதிகள் சீரமைப்பு : மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்கிறார் உதவிப் பணிப்பாளர் டீ.வசந்தகுமார்

பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பணிப்பிற்கு அமைவாக பூநகரி, சங்குப்பிட்டிப் பாலத்தில் ஏற்பட்டிருந்த சிறிய பாதிப்புகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் சீரமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2011 ஆம் ஆண்டு இன்றைய பிரதமரும் அப்போதைய ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தையும் - கிளிநொச்சியையும் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலம் சேதமடைந்து வருவதாக அண்மையில் மக்கள் தெரிவித்திருந்தனர்.

மன்னார்- யாழ் வீதியில் பாரிய நிதி செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலம் அமைந்துள்ள பகுதியில் காணப்படும் கொங்கிரீட்டிலான பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், பாலமும் துருப்பிடித்து சிதைவடைவதனை அவதானிக்க முடிந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பணிப்பிற்கமைவாக பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப் பணிப்பாளர் டீ. வசந்தகுமார், வட மாகாண பணிப்பாளர் குருஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் செயலாளர் சிவராம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். 

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த சேதத்தை பார்வையிட்டபின் பாதிப்புக்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது வீதி அபிருத்தி அதிகார சபையின் பாலங்கள் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு உதவிப் பணிப்பாளர் டீ.வசந்தகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இப்பாலத்தில் பயணிப்பது தொடர்பில் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அதில் காணப்படும் சிறிய சேதங்களை பாதுகாக்கும் ஆரம்ப பணிகளை முன்னெடுத்துள்ளோம்.

இந்த பாலம் 120 ஆண்டு கால பாவனைக்கு ஏற்ற வகையில் நிர்மாணிக்கப்பட்டது.

தற்பொழுது சேதம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் பகுதிகள் உவர் காற்றினால் ஏற்பட்ட சிறிய பாதிப்புக்களே ஆகும். இது தொடர்பில் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. 

2011 ம் ஆண்டு திறக்கப்பட்ட குறித்த பாலத்தினை 2016 ம் ஆண்டு திருத்தம் செய்தோம். 5 ஆண்டுகளிற்கு ஒருமுறை திருத்தங்களை செய்வோம். 

தற்பொழுது ஆரம்ப திருத்தல் பணிகளை செய்கின்றோம். தற்பொழுது உள்ள கொவிட் சூழல் காரணமாக முழுகையாக செய்ய முடியாதுள்ளது.

அதற்கு தேர்ச்சி பெற்ற ஊழியர்களை அழைத்து வந்து திருத்தம் செய்ய வேண்டும். விரைவில் அந்த பணி முழுமை அடையும். எனவே, போக்கு வரத்து செய்வதில் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அங்கு பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி வீதி மின்விளக்குகளும் சீர் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

No comments:

Post a Comment