மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி, நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் -அமைச்சர் ஜோன்ஸ்டன் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 12, 2021

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி, நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் -அமைச்சர் ஜோன்ஸ்டன்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது பகுதி , நவம்பர் 15 ஆம் திகதிக்குள் பொதுமக்கள் பாவனைக்கு திறக்கப்படும் என ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஒன்பது அல்லது பத்து மாதங்களுக்கு முன்பு மத்திய அதிவேக நெடுஞ்சாலையை எங்களால் நிறைவு செய்திருக்க முடியும். ஆனால் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தங்களின் நண்பர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதால் இது முற்றிலும் தாமதமானது. இல்லையெனில் இந்த நாட்டு மக்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு மத்திய அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தியிருக்க முடியும். அதனால் அமைச்சரவையில் அனுமதியுடன் வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை நாங்கள் ரத்து செய்தோம்.

நீதிமன்றத்திற்குச் சென்று அங்கு எட்டப்பட்ட பொது உடன்பாட்டின் படி நவம்பர் 15 ஆம் திகதி மீரிகம முதல் குருநாகல் வரையிலான பணியை நிறைவு செய்து பொதுமக்களுக்காக திறக்க இருக்கிறோம்.

நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கிறோம் என்று மக்கள் கூறுகின்றனர். நாங்கள் அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ள முயலவில்லை. நாங்கள் அரசியல் பழிவாங்கல் செய்திருந்தால், குற்றவாளிகள் இப்போது சிறையில் இருந்திருப்பார்கள். நாங்கள் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே எங்கள் ஒரே எதிர்பார்ப்பாகும்.

எனவே, நவம்பர் 15 ஆம் திகதிக்குள் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்து, பொதுமக்களுக்குத் திறக்க எதிர்பார்க்கிறோம்.
ஜனாபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக நாடு முழுவதும் வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.இதன் செயற்படுத்தப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவில் இருந்து பொதுஹெர வரையிலான இரண்டாம் கட்ட மரம் நடுகை திட்டத்தில் கலந்து கொண்ட போதே ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொள்வதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று அதிகாரம் மூலம் அடக்குமுறை மேற்கொள்ளப்படாது. தேர்தல் மேடையில் அவர் மக்களைக் கொன்று முதலைகளுக்கு உணவளித்த தலைவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். அவை அப்பட்டமான பொய்கள். உலகம் முழுவதும் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த மோசடி வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை விற்பதாலே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே, இந்த அவசர காலச் சட்டம் அடக்குமுறைக்காக கொண்டுவரப்படவில்லை. மக்களுக்கு மலிவான விலையில் பொருட்களை வழங்கும் திட்டத்திற்காகவே கொண்டு வரப்பட்டது. மக்களின் பசியைப் போக்க குறைந்த விலையில் பொருட்களை வழங்கக்கூடிய சகாப்தத்தை உருவாக்க இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, வேறு நோக்கம் எதுவும் இல்லை. இந்த நேரத்திலும் ஆட்சிக்கு வருவதற்காக இத்தகைய குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. விருப்பமில்லாத நிலையிலும் அவசர நிலையை கொண்டுவந்து இவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இவை கட்டுப்படுத்தப்படாவிட்டால், மக்கள் சுரண்டப்படும் ஒரு சகாப்தம் உருவாகும். சமீபத்திய நாட்களில் நாம் அதனை தான் அனுபவித்தோம். பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.

சீனி அதிக விலைக்கு விற்கப்பட்டதால் சீனி மீதான வரி குறைக்கப்பட்டது. மக்களுக்கு குறைந்த விலையில் சீனியை வழங்குவதற்காக சீனியின் மீதான வரி 25 சதங்களாக குறைக்கப்பட்டது. சீனி வரியை குறைத்து திருட்டில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிக்கின்றன.
அவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் இதேபோல் வரி குறைக்கப்பட்டது. அது ஒன்றும் புதிதல்ல. உலக சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கும்போது, ​​வரிகள் குறைக்கப்படுகின்றன. உலக சந்தையில் சீனியின் விலை குறையும் போது, ​​வரிகள் அதிகரிக்கப்பட்டு, அந்த வருமானத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. பெறப்பட்ட பணம் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. அன்றும் எதிர்க்கட்சிகள் சேறு பூசின. இன்றும் எதிர்க்கட்சிகள் சேறு பூசுகின்றன.

சீனி மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது விலை கட்டுப்பாடு தொடர்பான முடிவுகளை அரசு எடுத்தது. அத்தகைய முடிவுகளை எடுக்க முடியாவிட்டால், அரசாங்கமொன்று எதற்கு? ஜனாதிபதி ஒருவர் எதற்கு? அரசாங்கம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுத்துள்ளது. எனவே, நாங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிவார்கள் என்று நான் எதிர்க்கட்சிகளுக்கு கூற விரும்புகிறேன்.

இந்த நாட்டில் அப்பாவி ஆசிரியர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் மத்தியில் எதிர்க்கட்சி குழுக்கள் புகுந்து அவர்களை வீதிக்கு இறக்கி மரண சகாப்தத்தை உருவாக்கின. கொவிட் தடுப்பு செயற்திட்டத்தின் கீழ் முதல் பத்து நாடுகளிடையே எமது நாட்டை கொண்டு வந்தபோது, ​​அவர்கள் இந்த நாட்டு மக்களை எப்படியாவது கொல்வதற்கு முயன்றார்கள். அவர்கள் அதைச் செய்தார்கள். அந்த நேரத்தில் அவசர நிலை கொண்டுவரப்பட்டு அனைத்து போராட்டங்களும் ஒடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? ஆனால் , அந்த நேரத்தில் அவர்கள் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாத காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களுக்கு கோவிட்டை பரப்பினார்கள்.

நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தடுப்பூசி திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தும் உலகின் முதல் 10 நாடுகளிடையே எமது நாடு முன்னணியில் உள்ளது. அதைப் பற்றி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். தடுப்பூசி போட வேண்டாம் என்று தான் பிரேமதாச குழு பிரசாரம் செய்தது, இலங்கையை ஆய்வு கூடமாக்க வேண்டாம் என்று பிரேமதாஸ தெரிவித்தார்.

பல்வேறு சமூக ஊடகங்களை உருவாக்கி மக்களுக்கு இங்கு வர வேண்டாம் என்று தகவல் அனுப்புவதை தான் அவர்கள் செய்தார்கள். தடுப்பூசி எடுத்தால் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவோம் என்று கூறினார். பக்க விளைவுகள் வரும் என்று சொன்னார். தடுப்பூசி திட்டத்தை தோல்வியடையச் செய்வதையே எதிர்க்கட்சி செய்தது. சமூக ஊடகக் குழுவொன்றில் உள்ள ஒரு மருத்துவர் தடுப்பூசி பற்றி தவறான பிரச்சாரத்தை பரப்புவதை நான் பார்த்தேன். அவர்கள் நாடு முழுவதும் செயலில் உள்ள தடுப்பூசி திட்டத்தை முறியடிக்க விரும்புகிறார்கள்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தடுப்பூசி வழங்குவதை வெற்றிகரமாக முன்னெடுக்கவே பாடுபடுகிறது. மக்களும் இந்த தடுப்பூசியைப் பெற விரும்புகிறார்கள். கோவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

உலகின் பல்வேறு நாடுகளின் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக எமது நாட்டில் கொவிட் தொற்றை ஒழிக்க எதிர்பார்க்கிறோம். மக்களை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்வதை தான் எதிர்க்கட்சிகள் செய்கின்றன. அவர்கள் 1971 இல் 12,000 பேரைக் கொன்றனர். 88/89 இல், சுமார் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அவர்கள் கோவிட் தொற்றுநோய் மூலம் மக்களை கொல்ல முயற்சிக்கின்றனர். கோவிட் ஊடாக மக்கள் இறப்பதை காணவே இவர்கள் விரும்புகிறார்கள். இன்று அத்தகைய எதிக்கட்சி தான் உள்ளது.

மீரிகம பரிமாற்ற வீதிக்கட்டமைப்பிற்கு அருகில் (12-09-2021) இந்த மரநடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நான்கு கட்டங்களாக நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படும் மீரிகமவில் இருந்து பொதுஹர வரையான மத்திய நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதிக்குள் சுமார் 200 மரக்கன்றுகள் நடப்பட்டன. அமைச்சர் ஒரு மரக்கன்றை நடுவதை புகைப்படத்தில் காணலாம். வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சமிந்த அதலுவகே, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா வீரகோன், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட திட்டப் பணிப்பாளர் அநுர கெஹெஎல்லா மற்றும் அதிகாரிகள் மரம் நடுதல் நிகழ்வில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment