நாட்டின் கொவிட் நிலைமைகள் குறித்த சரியான தரவுகளை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுக்குமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தமது கேள்வியில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் புதிய முறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது நாட்டின் பிரதமர் அல்லது சுகாதார அமைச்சர் கொவிட் நிலைமைகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கின்றனர்.
இலங்கையிலும் சுகாதார அமைச்சரால் அவ்வாறான அறிக்கையொன்றை ஒவ்வொரு வாரமும் சமர்ப்பிக்க வேண்டும். அது மிகவும் பயனுடையதாக இருக்கும். ஒவ்வொருவரும் பலவிதமாக கருத்துகளை கூறிவருகின்றனர். சிலரின் கருத்துகளின் பிரகாரம் 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கி உள்ளோம் என்றார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து வரவேற்கத்தக்கது. கேள்வி பதில்களுக்கு பதிலாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நாட்டின் கொவிட் நிலைமைகள் குறித்து அறிக்கையொன்றை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையை எடுக்கிறோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment