புது வருட காலப்பகுதி மற்றும் அதன் பின்னரான காலத்தில் மக்கள் ஒன்றுகூடல்கள் அதிகமாக இடம்பெற்றமையாலேயே சமூகத்தில் அதிகளவான கொவிட்19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
“கடந்த காலத்தைவிட சமூகத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். தொழில்நுட்ப ரீதியாக அவ்வாறானதொரு நிலை இன்னமும் ஏற்படவில்லை. கடந்த காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி திட்டமிட்டு மக்கள் ஒன்றுகூடல்கள் இடம்பெற்றன.
புது வருடத்திற்குப் பின்னர் சுகாதார வழிகாட்டல்களை மீறியே அனைத்து ஒன்றுகூடல்களும் இடம்பெற்றிருந்தன. இந்த செயற்பாடுகளின் பிரதிபலனைத்தான் நாம் தற்போது கண்டுவருகிறோம்.
புது வருடத்திற்கு கூடிய ஒன்றுகூடல் அல்லது அதற்கு பின்னர் கூடிய ஒன்றுகூடல் என வைரஸூக்கு தெரியாது. அதேபோன்று இவை உரிமைகளுக்காக இடம்பெற்ற ஒன்றுகூடல் ஒன்றும் வைரஸூக்குத் தெரியாது.
அதிக மக்கள் கூட்டங்கள் இருக்கும் இடத்தில் வைரஸ் இலகுவாக பரவலடைந்து விடும். ஆகவே, இனிவரும் காலங்களில் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிப்பதன் ஊடாக கொவிட் தொற்றிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்றும் அவர் கூறினார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment