டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொள்ள வந்த பெலரூஸைச் சேர்ந்த மெய்வல்லுநர் வீராங்கனை கிறிஸ்ட்ஸினா ரிமனோவ்ஸ்காயா (Krystsina Timanovskaya) போலந்தில் தமக்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.
பெலரூஸ் பயிற்றுவிப்பாளர்களை விமர்சித்ததாக தெரிவித்து, நேற்றுமுன்தினம் தன்னை பலவந்தமாக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெலரூஸுக்கு அனுப்ப முயற்சித்ததாக அவர் ஜப்பான் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
தற்போது ஜப்பான் பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள அவர், தாம் தாயகம் திரும்பும் பட்சத்தில் துன்புறுத்தப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
அவர் அளவிற்கு அதிகமான முறையில் உணர்ச்சிவசப்படும் நிலையில் இருந்தமையினால், பெலரூஸ் ஒலிம்பிக்ஸ் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக பெலரூஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை ஜப்பானில் உள்ள போலந்து தூதுவராலயத்தினுள் நுழையும் காட்சிகள் வெளியிடப்பட்ட நிலையில் அவர் அரசியல் அந்தஸ்து கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு கொள்ள இருந்த நிலையில், குறுகிய அறிவித்தலில் 4X400 மீற்றர் அஞ்சல் போட்டிக்கு மாற்றப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment