மட்டக்களப்பில் கடந்த சில தினங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் அறிமுகம் - அரச அதிபர் கே.கருணாகரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 14, 2021

மட்டக்களப்பில் கடந்த சில தினங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் அறிமுகம் - அரச அதிபர் கே.கருணாகரன்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொவிட் தொற்றாளர்களின் தொகை அதிகரித்து வருவதன் காரணமாக பொதுமக்களை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரணச்சடங்கில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியுமென மாவட்ட கொவிட் செயலணிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இன்று (14) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்துத்தெரிவித்த அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த ஒரு சில தினங்களாக கொவிட் 19 தாக்கத்திற்கு உட்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்திருக்கின்றது. இதன் காரணமாக உடனடியாக சில தீர்மானங்களையும் கட்டுப்பாடுகளையும் இறுக்கமாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

நேற்றைய தினம் எமது மாவட்ட செயலணிக் கூட்டத்தில் பல்வேறு தரமான கருத்தாடல்களை உள்வாங்கி பொதுவான சில முடிவுகளை எடுத்திருக்கின்றோம்.

மாகாணப் பணிப்பாளர் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். சகல வலயங்களிலும் வலயக் கல்விப் பணிப்பாளரினால் மாணவர்களை ஒன்றுதிரட்டி பரீட்சைகள் அல்லது ஏதாவது நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால், அதற்கான முன் அனுமதியை சுகாதாரத் தரப்பினரிடமிருந்து பெற்ற பின்னரே பாடசாலைக்கு மாணவர்களை அழைக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இது மாணவர்களின் ஒன்றுகூடலைத் தவிர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும்.

அத்துடன், சில சமூக விடயங்களிலே பொதுமக்கள் ஒன்றுகூடும் பொழுது ஒரு புதிய கொத்தணி உருவாகுவதற்கான வாய்ப்பு ஏற்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையிலே மரணச் சடங்குகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை ஒரே தடவையில் பதினைந்து பேராக மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, திருமணச் சடங்குகளிலே பதினைந்து பேர் மட்டும் கலந்து கொள்ள முடியும். அதனைவிடக் கூடுதலானவர்கள் கலந்து கொண்டால் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பொலிஸாரும் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலே சில ஆலயங்களிலே பக்தர்கள் நூற்றுக்கணக்கில் ஒன்று திரண்டார்கள். இதன் காரணமாக புதிய கொத்தணிகள் உருவாகும் என்ற ஐயப்பாடு பலரால் எழுப்பப்பட்டது.

இதன் காரணமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை மதஸ்தலங்களுக்குச் செல்கின்ற பொதுமக்களுக்கான அனுமதியை இடைநிறுத்தி நாளாந்த பூசைகள் மற்றும் மதக்கடமைகளிலே அந்த ஆலய மதகுருவும் நிர்வாகத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கடமைகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

நாடளாவிய ரீதியிலே கொரொனா பரவலின் அச்சுறுத்தல் பாரியளவில் எதிர்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்தினால் பல தீர்மானங்கள் நாளுக்குநாள் எடுக்கப்பட்டு அமுலாக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களும் இதனை விளங்கிக் கொண்டு சுய கட்டுப்பாடுகளை தாங்களாகவே மேற்கொண்டு சமூக ஒன்றுகூடல்களை குறைத்து, வீட்டை விட்டு வெளியேறாது இருந்தால் சுகாதாரத் துறையினருக்கும் ஏனையவர்களுக்கும் நாங்கள் உதவி செய்பவர்களாக இருப்போம்.

எனவே, இந்த நடைமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றி உங்கள் ஒத்துழைப்புகளை வழங்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப் பொறுத்தவரை கடந்த 5ம் திகதி சமுர்த்தி பிரிவில் திடீரென 10 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டார்கள். நேற்றைய தினம் வரை 20 பேர் கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 18ம் திகதி வரை சமுர்த்திக்கிளை மூடப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment