(எம்.ஆர்.எம்.வசீம்)
பேக்கரி உரிமையாளர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை வழங்கி இருக்கின்றோம். அதனால் பாண் விலையை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை. அத்துடன் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது தொடர்பில் குறித்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசன்த அழகியவண்ண தெரிவித்தார்.
உலக சந்தையில் போதுமை மாவின் விலை அதிகரித்திருப்பதால், பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்க வேண்டி வரும் எனவும் இதற்கு அரசாங்கம் முறையான தீர்வொன்றை வழங்காவிட்டால் இன்று திங்கட்கிழமை முதல் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்திருக்கும் விடயம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பேக்கரி உரிமையாளர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை தாெடர்பாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த கலந்துரையாடலின் இணக்கப்பாடாக பாண் ஒன்றின் தற்போதைய விலையான 60 ரூபாவுக்கு தொடர்ந்து விற்பனை செய்வதாகவும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
அத்துடன் பேக்கரி உரிமையாளர் எதிர்நோக்கியுள்ள பாம் எண்ணெய் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பில் கூட்டுறவு நிறுவனங்கள் ஊடாக தீர்வொன்றை பெற்றுக் கொடுக்க, கலந்துரையாடலின்போது இணக்கப்பாடுக்கு வர முடிந்தது. பாண் விலை அதிகரிக்கப்பட்டால், அது மக்களின் வாழ்வாதாரத்துக்கு நேரடியாகவே பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதனால் இது தொடர்பாக அரசாங்கம் உடனடி தீர்வோன்றுக்கு வந்திருக்கின்றோம்.
அத்துடன் நுகர்வோர் அதிகார சபையின் விசேட வர்த்தமானி ஊடாக விலை நிர்ணயிக்கப்பட்ட உணவுப் பாெருட்களில் கோதுமை மாவும் உள்ளடங்கி இருக்கின்றது. அதனால் நினைத்த பிரகாரம் கோதுமை மா விலை அதிகரிக்க முடியாது, அதனால் கோதுமை மா விலை அதிகரித்து விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை இன்னும் சில தினங்களில் வழக்கு தொடுக்க இருக்கின்றது. அது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றார்.
No comments:
Post a Comment