சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி : ரிஷாத்தின் மனைவி, பெற்றோரிடம் மீண்டும் பொலிஸார் வாக்குமூலம் : வேலைக்கு அழைத்து வந்தவரிடமும் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Monday, July 19, 2021

சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை பிரேத பரிசோதனையில் உறுதி : ரிஷாத்தின் மனைவி, பெற்றோரிடம் மீண்டும் பொலிஸார் வாக்குமூலம் : வேலைக்கு அழைத்து வந்தவரிடமும் விசாரணை

ஹட்டன், டயகம சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபரிடம் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாய் மற்றும் ரிஷாத்தின், தந்தை, மற்றும் மனைவியிடமும் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேநேரம், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்கமர்தப்பட்டிருந்த ஹட்டன், டயகம சிறுமி எரிகாயங்களுடன் கடந்த ஜூலை 03ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு, பொரளை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.

அதேபோல் நேற்றையதினம் ரிஷாத்தின் மனைவியின் பெற்றோரிடம் மீண்டும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அந்த சிறுமியை கொழும்புக்கு அழைத்து வந்த நபரிடம் நேற்று வாக்குமூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுமி டயகம பிரதேசத்திலிருந்தே இங்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொரளை பொலிஸார், முன்னாள் அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிறுமி நீண்ட காலகமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றியவர்களிடம் 06 மணி நேரத்துக்கும் அதிகமாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் ரிஷாத்தின் தாய் மற்றும் தந்தையிடம் நேற்றைய தினம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நேற்று அவரின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ள போதிலும் அவர் திடீர் சுகயீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையினால் வைத்திய ஆலோசனைக்கமைய விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

சிறுமியின் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிறுமி தனது 15 வயதில் ரிஷாத்தின் வீட்டிற்கு பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, சிறுமி கடந்த 08 மாதங்களாக வீட்டிற்கு செல்லவில்லையென தெரிய வந்துள்ளது. அவருக்கு மாதம் 20 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸாருடன் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ்.செல்வநாயகம்

No comments:

Post a Comment