சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் வழியிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பயணிக்கும் என்றும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் : செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் வழியிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பயணிக்கும் என்றும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் : செந்தில் தொண்டமான்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் அரசியல், தொழிற்சங்க, பொருளாதார மற்றும் ஏனைய உரிமைகளை பாதுகாக்கும் நோக்கோடு 1939ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸாக உருவாக்கப்பட்டு 1954ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பரிணமித்து இன்று 82ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது, இந்திய வம்சாவளித் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் 1939ஆம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸாக உருவாக்கப்பட்டு 1954ஆம் ஆண்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பரிணமித்தது. வெள்ளையர் காலம் முதல் இன்றுவரை இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் அரசியல், தொழிற்சங்க, பொருளாதார மற்றும் ஏனைய உரிமைகளை பாதுகாக்கும் நோக்கோடு எவருடனும் சமரசமின்றி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் என இரு பெரும் தலைவர்கள் இந்த மாபெரும் ஸ்தாபனத்தை வழிநடத்தி இந்திய வம்வாசவளித் தமிழ் மக்களின் இறுப்பை இந்த நாட்டில் உறுதிப்படுத்தி அவர்களின் ஏனைய அரசியல், பொருளாதார, தொழிற்சங்க உரிமைகள் மற்றும் ஏனைய நலன்புரி விடயங்களை பாதுகாத்து வந்தனர்.

பிரஜா உரிமை அற்ற சமூகமாக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு ஆளும் அரசாங்கங்களுடன் இணைந்து தொடர் பேச்சுவார்தைகள் மற்றும் போராட்டங்களை நடத்தி பிரஜா உரிமையை பெற்றுத்தந்து இ.தொ.கா.தான்.

அதேபோன்று யுத்த காலத்தில் கொழும்பிலும் மலையகத்திலும் பெரும் நெருக்கடிக்கு உள்ளான மலையக இளைஞர், யுவதிகளையும் எமது மக்களையும் இ.தொ.காவே பாதுகாத்திருந்தது.

மலையக மக்களின் அபிவிருத்திக்காக தோட்ட உட்கட்டமைப்பு என்ற அமைச்சை உருவாக்கி மலையகத் தமிழர்களுக்காக பல அபிவிருத்தித் திட்டங்களையும் வீட்மைப்புத் திட்டங்களையும் இ.தொ.கா என்ற மாபெரும் ஸ்தாபனமே ஏற்படுத்தியிருந்தது.

யுத்தத்தின் பின்னர் 2009ஆம் ஆண்டு சோனியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பயனாகவே இன்று மலையகம் முழுவதும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வீடமைப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆகவே, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் குறித்தே எப்போதும் இ.தொ.கா சிந்தித்தே செயலாற்றுவதுடன், எமது ஸ்தாபனத் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் காட்டிய அதேவழியிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து பயணிக்கும் என்றும் மக்களின் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment