(இராஜதுரை ஹஷான்)
கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் கிடையாது. இக்காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள். இணைய வழிக் கல்வி நடவடிக்கைளில் இருந்து விலகியுள்ளமை படுமோசமான செயற்பாடாகவே கருத வேண்டும். கோரிக்கைகயை நிறைவேற்றிக் கொள்வதற்கு 43 இலட்சம் மாணவர்களை பகடையாக வைப்பது எந்தளவிற்கு நியாயமாகும் என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இலங்கை ஆசிரிய சங்கத்தினரும், தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு போராட்டங்கள் மற்றும் ஒன்றுகூடலுக்கு மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளன.
அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு புறம்பாகவே இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். இதன் காரணமாக கைது செய்யப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
தனிமைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவில்லை. சுகாதார தரப்பினரது பரிந்துரைகளுக்கு அமையவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் இதில் எவ்வித அரசியல் நோக்கங்களும், தலையீடுகளும் காணப்படவில்லை.
தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதினால் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அதற்கான பல வழிமுறைகள் காணப்படுகின்றன. இவர்களுக்கு சார்பாக ஆசிரியர்கள் இணைய வழிக் கல்வி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளமை முற்றிலும் தவறான செயற்பாடாகும்.
ஒரு தரப்பினரது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஆசிரியர்கள் 43 இலட்ச மாணவர்களை பகடைகாயாக வைப்பது எந்தளவிற்கு நியாயமானது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித் துறைக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த பிரத்தியேக தொலைக்காட்சி அலைவரிசைகளை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment