தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனை - கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 8, 2021

தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனை - கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்



கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள தனியார் மருந்து விற்பனை நிலையங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

மருந்து விற்பனை நிலையங்களில் பாரிய குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இரு வாரங்களுக்குள் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், உரிய மருந்தகம் மூடப்படுமெனவும் கூறினார்.

பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள 64 தனியார் மருந்து விற்பனை நிலையங்களும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு பாதுகாப்பான மருந்து, மாத்திரைகளை கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டியது எமது பாரிய பொறுப்புகளில் ஒன்றாக காணப்படுகிறது.

சில மருந்தகங்களில் காலவதியான மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையை பயன்படுத்தி கூடுதலான விலைக்கு மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வதாகவும், நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறினார்.

பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்து மருந்து விற்பனை நிலையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment