தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றவர்கள் இருந்த பஸ்ஸை திருப்புமாறு நான் உத்தரவிட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தனிமைப்படுத்தலுக்காக பசறைக்கு சென்ற பஸ்ஸை நான் திருப்புமாறு நான் கூறியதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவ்வாறான குற்றச்சாட்டுகள் பொய்யானது.
பிரபல அழகுக் கலை நிபுணர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லும் போது சட்டத்தரணி ஒருவர், எனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்படும் குழுவினருக்கு அவர்களின் உடைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல இடமளிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இதேபோன்று இரண்டு பேர் என்னுடன் கதைத்தனர். அதன்போது பஸ்ஸில் பொறுப்பாக இருந்த பொலிஸ் உத்தியோகத்தரை கதைத்து அதனை உறுதிப்படுத்தியதுடன் அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு கூறினேன்.
இதன்போது அந்த பஸ்ஸை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் பொருட்களை கொடுத்து அனுப்ப அவர்களின் உறவினர்கள் நடவடிக்கையெடுத்தனர்.
இதனை தவிற நான் ஒருபோதும் பஸ்ஸை திருப்புமாறோ, தனிமைப்படுத்தல் தொடர்பாகவோ எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை. நான் அனைவருக்கும் நியாயத்தை வழங்கவே நடவடிக்கையெடுத்தேன்.
ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்
No comments:
Post a Comment