(எம்.மனோசித்ரா)
அமெரிக்கா சென்று நாடு திரும்பியுள்ள பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிச்சயம் நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பார் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷவை வரவேற்பதற்கு விமான நிலையத்திற்கு சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு திரும்பியுள்ள பசில் ராஜபக்ஷ பி.சி.ஆர். பரிசோதனை செய்துள்ளதோடு, சுகாதார வழிகாட்டல்களுக்கமைய 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொள்ளப்படவுள்ளார்.
கொவிட் தொற்று நிலைமையால் மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இதனை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட சகலரும் ஏற்றுக் கொள்கின்றோம். எனவே மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கவே முயற்சிக்கின்றோம்.
பசில் ராஜபக்ஷ நிச்சயம் மக்களுக்கான நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பார். காரணம் கடந்த காலங்களில் ஆற்றிய சேவைகளை அவதானிக்கும் போது, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொருளாதாரத்தை சிறந்த முறையில் நிர்வகித்தார்.
அதன் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இலங்கை தெற்கு ஆசியாவில் சிறந்த நாடாக உயர்வடைந்தது. அபிவிருத்தியும் இதே போன்று வளர்ச்சியடைந்தது. எனவே அவர் நிச்சயம் மக்களுக்கான நிவாரணத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம். என்றார்.
No comments:
Post a Comment