(செ.தேன்மொழி)
தாய்லாந்து தூதரகத்திற்கு சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் பெறுமதியுடைய காணியை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் சட்டத்தரணி ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கொழும்பு-7, ஸ்ரீ.டப்லியூ.டப்லியூ கண்ணங்கரா மாவத்தையில் அமைந்துள்ள தாய்லாந்து தூதரங்கத்திற்கு சொந்தமான 20 பேர்சஸ் காணியை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், காணி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்தமை தொடர்பில் நேற்று புதன்கிழமை சட்டத்தரணி ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யதுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது காணியை விற்பனை செய்ததாக கூறப்படும் நபரையும், அதனை விலைக்கு வாங்கிய நபரையும் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்து, நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்ததுடன், சுமார் 50 கோடி ரூபாய் பெறுமதியுடைய காணியே சந்தேக நபர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அதற்கமைய, சந்தே நபரான சட்டத்தரணியை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment