சிறந்த திட்டமிலின்மையே வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக் காரணம் - புகையிரத நிலைய அதிபர் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

சிறந்த திட்டமிலின்மையே வீதிகளில் வாகன நெரிசல் ஏற்படக் காரணம் - புகையிரத நிலைய அதிபர் சங்கம்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் பொது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் மீள சேவையில் ஈடுப்படுத்தப்படவில்லை. பொது போக்குவரத்து சேவையினை சிறந்த திட்டமிடலுக்கு அமைய மீள ஆரம்பித்திருந்தால் பிரதான வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்காது என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமவடு தெரிவித்தார்.

புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் கொழும்பு மற்றும் பிரதான நகரங்களில் சாதாரண நாட்களில் காணப்படுவதை போன்று வாகன நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொலிஸாரும், பொதுமக்களும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள்.

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளபோது பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது போக்குவரத்து சேவைகள் ஏதும் மீள ஆரம்பிக்கப்படவில்லை. 

பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்களுக்காக மாத்திரம் பொது போக்குவரத்து சேவையினை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சுக்கு குறிப்பிட்டோம். ஆனால் அவற்றை அரசாங்ம் கவனத்திற் கொள்ளவில்லை.

அத்தியாவசிய சேவைகள் ஏதும் ஆரம்பிக்கப்படாத காரணிகளினால் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். இதனால் சாதாரண நாட்களை காட்டிலும் வாகன நெரிசல் தற்போது அதிகரித்துள்ளது. முறையான திட்டத்தை செயற்படுத்தியிருந்தால் இவ்வாறான நிலை தோற்றம் பெற்றிருக்காது.

பயணத்தடை தளர்த்தப்பட்ட பிறகு சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கும் திட்டங்களை வகுக்குமாறு புகையிரத திணைக்களத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளேம். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அனைத்து தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்க் கொள்ள நேரிடும் என்றார்.

No comments:

Post a Comment