(எம்.மனோசித்ரா)
இலங்கை குளங்களை சீனா அபிவிருத்தி செய்வது தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை நாம் அறியோம். எனவே அதனை நாம் நிராகரிக்கின்றோம். எவ்வாறு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்பது எமக்கு தெளிவாக தெரியாது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், 'குளங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகிறது. இவற்றிலுள்ள மண் முதலானவற்றை குறித்த நிறுவனம் இலவசமாக அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இது உண்மையா ?' என்று கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனினும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் சூழலியல் அதிகாரிகள் உள்ளிட்டோருடனான கலந்துரையாடல்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்படும். ஆனால் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மண் கொண்டு செல்லப்படுகிறதா என்பது எனக்கு தெரியாது.
நாம் அறிந்த வரையில் இரு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவை தற்போது இயக்கப்படுகின்றன. அவை இலங்கையில் காணப்படும் கொள்முதல் முறைமைகளுக்கு அமைய கொள்வனவு செய்யப்பட்டவை. ஆனால் இலங்கையில் அவ்வாறானதொரு சுற்றாடல் பாதிப்பை ஏற்படும் செயற்பாடுகள் எவையும் இல்லை என்றார்.
No comments:
Post a Comment