இந்தியாவில் சட்ட ரீதியில் வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக எழுந்து வந்தன.
இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பெப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021 ஐ கொண்டு வந்தது
புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்பவை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வருகிறது.
புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லையேல் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படியும் டுவிட்டர் நிறுவனத்திற்கு கடந்த 5 ஆம் திகதி இந்திய மத்திய அரசு இறுதி எச்சரிக்கை விடுத்தது.
இந்த இறுதி எச்சரிக்கையை தொடர்ந்து இந்தியாவின் புதிய விதிகளை ஏற்க கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசுக்கு டுவிட்டர் நிறுவனம் கடந்த 7ஆம் திகதி கோரிக்கை விடுத்தது. இதனால், சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் இதுவரை ஏற்கவில்லை.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்ததால் சமூக வலைத்தளங்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்டு வரும் சட்ட ரீதியிலான பாதுகாப்பை டுவிட்டர் நிறுவனம் இழக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment