(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பல மாதங்களாக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். இது மிகவும் அநீதியாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர். சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை அறிவிப்பு மீது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்று வருகின்றன. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ்வுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்ற, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் திருபுப்படுத்தப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் நீண்ட காலமாக பிணை இல்லாமல் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
அவ்வாறு இருக்கும்போது ஜெனிவாவில் மனித உரிமை தொடர்பான ஆணையாளர், இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருக்கின்றார். இதனால் எமக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் இல்லாமல்போகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அத்துடன் சிறைச்சாலைகளில் இடம்பெறுவது நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளாகும். சிறைச்சாலையில் இல்லாமல் இருக்கும் பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வு பிரிவு போன்ற பிரிவுகளுக்கு கீழ் இருப்பவர்கள் தொடர்பாகவே பிரச்சினை இருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பல மாதங்களாக எந்த குற்றச்சாட்டும் தெரிவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். இது மிகவும் அநீதியாகும்.
குறிப்பாக குற்றப்புலனாய்வு பிரிவு முன்னாள் பிரதானி ஷானி அபேசேகர தொடர்பில் மேன்மறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு அரசாங்கத்துக்கு கன்னத்துக்கு அரைந்ததுபோல் இருக்கின்றது. அந்தளவுக்கு மோசமான முறையில் பொய் சாட்சிகளை ஏற்படுத்தி வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றது.
அதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரச்சினைக்குரிய சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி நாட்டுக்கு வரக்கூடிய அழுத்தங்களில் இருந்து மீள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment