(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
இலங்கையின் தற்போதைய நிலை தொடர்ந்தால் தினம்தோரும் கொவிட் தொற்றாளர்கள் இந்தியாவை விட அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதனால் இது தொடர்பாக அரசியல் ரீதியில் தீர்மானம் எடுக்காமல் சுகாதார பிரிவினர் சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கொவிட்19 சவால்களுக்கு மத்தியில் நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் கொவிட் மூன்றாம் அலைக்கு நாங்கள் முகம்கொடுத்து வருகின்றோம். கொவிட் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருவதை காண்கின்றோம். தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
கொவிட் ஆரம்ப கட்டத்தில் இந்த தொற்று முதியவர்களுக்கே அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூன்றாவது அலையில் சிறுவர்கள், இளைஞர்களும் பாதிக்கப்பட்டு வருவதை காண்கின்றோம். அதேபோன்று தொற்றுக்குரிய அறிகுறிகளும் வெளிப்படாமல் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு நிமோனியா நிலைமைக்கு மாற்றமடைகின்றது.
அதனால், இந்த நிலைக்கு ஒக்சிசனின் தேவை அதிகமாகும். நாட்டில் ஒட்சிசன் எந்தளவு கையிருப்பில் வைத்திருக்கின்றோம் என்பது தொடர்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒட்சிசன் உபகரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் கொவிட் மூன்றாம் அலை ஏற்படுவதற்கு அரசாங்கத்தின் கவனயீனமும் காரணமாகும். புத்தாண்டு காலத்தில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை மறந்து நினைத்த பிரகாரம் நடமாட ஆரம்பித்தனர். அரசாங்கமும் இது தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் பொறுப்பற்று இருந்தது. அதனால் இன்று நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் அதிக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலைக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவே ணே்டும் என்றார்.
No comments:
Post a Comment