ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் : நாங்கள் கைதுக்கு எதிராக போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 1, 2021

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத எம்பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் : நாங்கள் கைதுக்கு எதிராக போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

நூருல் ஹுதா உமர்

கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான எம்பிக்கள் அரசை பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் கலந்துகொள்ளாமை தொடர்பில் உயர்பீடத்தில் நடவடிக்கை எடுப்போம். றிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம் ஆகியோரின் பேரம் பேசும் சக்தியை இல்லாமலாக்கி 20 க்கு கையுயர்த்திய அந்த ஏழ்வரில், மூவர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுக்க தயாராக உள்ளது. எங்களின் கட்சி மக்கள் சார் கட்சி. யாருக்கும் காத்திருக்க மாட்டாது. விரும்பியவர்கள் இருக்கலாம், விரும்பாதவர்கள் புறமுதுகு காட்டி ஓடலாம். சலுகைகளுக்கு சோரம் போகும் யாருக்கும் இங்கு இடமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கே.எம். அப்துல் றஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கைதை கண்டித்து தமது எதிர்ப்பை காட்டும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு வெள்ளிக்கிழமை மாலை கல்முனையில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வலது கரத்தை போன்று கடந்த காலங்களில் இருந்தவர்தான் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள். தான் நிர்வாகித்த அமைச்சுக்களில் எவ்வித ஊழலும் செய்யாதவர், தனது அமைச்சின் கீழ் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களை இலாபத்தில் இயங்க செய்தவர் என பல்வேறுபட்ட கௌரவங்களை பெற்ற ஏழைகளின் துயரமறிந்த தலைவரே றிசாத் பதியுதீன் அவர்கள். 

அவரின் கைது அநீதியானது. அதற்கு எதிராக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் அதிர்வொன்றை உருவாக்க எண்ணியுள்ளோம். அதில் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம்.

சட்டத்துக்கு முரணாக வீட்டை உடைத்துக் கொண்டு றிசாத் அவர்களை கைது செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரின் கைதுக்கு முஸ்லிம் அல்லாத மக்களும் தமது எதிர்ப்பை வெளியிடுவதிலிருந்து அவரின் சமூக உணர்வை அறிந்து கொள்ள முடியும். அவர் கைது செய்யப்பட்டுள்ளது செப்பு விடயத்தில் என்றால் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளரின் சிபாரிசுக்கு இணங்கவே அவர் அதை செய்துள்ளார். 

கைதின் முக்கிய நோக்கம் முஸ்லிங்களுக்கு எப்போது பிரச்சினை வந்தாலும் அப்போது துணிவாக அவர் பேசுவதனாலையே. ஜனாஸா விடயத்திலும் மிக தைரியமாக பேசிய ஆளுமையான அந்த தலைவரின் கைதை ஏற்க முடியாது. நாங்கள் இன சௌயன்யத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனாலையே வீதிக்கு இறங்கவில்லை. நாங்கள் போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும். எங்களை யாரும் தடுக்க முடியாது.

ஊடகங்கள் உண்மையாக செயற்பட்டு முழு ஒத்துழைப்பை இவ்விடயத்தில் வழங்க முன்வர வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ், பாதுகாப்பு தரப்பு என்பன ஒன்றிணைந்து தலைவர் றிசாத்தின் குரலுக்கு செவிசாய்த்து விடுதலை செய்ய வேண்டும். 

அவருடைய கைது நியாயமாக இருந்தால் குற்றங்களை நிரூபித்து ஆதாரங்களை வெளியிடுங்கள். இந்த நாட்டை வறுமையின் பிடியிக்கு கொண்டு செல்லாமல் ஜெனிவாவில் நடந்ததை படிப்பினையாக கொண்டு அரசு நடக்க முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment