கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மூத்த நடிகரான ஜோக்கர் துளசி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பால் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், பாடகர்கள் மரணம் என்று செய்திகள் வெளியாவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் மூத்த நடிகரான ஜோக்கர் துளசிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (9) காலமானார்.
45 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து வந்தவர் ஜோக்கர் துளசி. மருதுபாண்டி, உடன்பிறப்பு, தமிழச்சி, இளைஞரணி, அவதார புருஷன் போன்ற படங்களில் நடித்துள்ள இவர். கோலங்கள், வாணி ராணி, கஸ்தூரி, அழகு ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
மேலும் தந்துவிட்டேன் என்னை என்கிற வெப் தொடரிலும் நடித்திருந்தார். படங்களில் அவர் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர்ந்தார்.
ஜோக்கர் துளசி கொரோனாவால் இறந்த செய்தி அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துளசி குறித்து ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஜோக்கர் துளசியின் மறைவு குறித்து அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். அருமையான நபர். பல ஆண்டுகளாக நாடகங்கள், படங்களில் நடித்தவர். தினமும் எனக்கு பொசிட்டிவான மெசேஜ்கள் அனுப்புவார்.
அவருடன் சேர்ந்து வாணி ராணியில் நடித்தேன். அவரை மிஸ் பண்ணுகிறேன் என்றார்.
ராதிகா நடிப்பில் வந்த வாணி ராணி சீரியலுக்கு இல்லத்தரசிகளிடையே அமோக ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் தன் வாணி ராணி குடும்பத்தை சேர்ந்த ஒருவரை இழந்த கவலையில் இருக்கிறார் ராதிகா.
கடந்த மாதம் 27ஆம் திகதி இயக்குநர் தாமிராவும், 30ஆம் திகதி இயக்குநர் கே.வி. ஆனந்தும், கடந்த 6ஆம் திகதி நடிகர் பாண்டுவும், பாடகர் கோமகனும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகினர். இந்நிலையில் இந்த வாரம் ஜோக்கர் துளசி கொரோனாவால் உயிரிழந்துவிட்டார்.
No comments:
Post a Comment