நாளையே பதவியேற்பு விழா நடைபெறும் என வெளியான செய்திகள் உண்மையல்ல என பினராயி விஜயன் கூறி உள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.
141 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட கேரளாவில் ஆட்சியமைக்க 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாலை 7 மணி நிலவரப்படி இடதுசாரி கூட்டணி 96 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. இதன் மூலம் கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி அமைய உள்ளது.
இந்த வெற்றி குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது இந்த மாபெரும் வெற்றியை தாழ்மையுடன் கேரள மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். இந்த வெற்றி கேரள மக்களுக்கு சொந்தமான வெற்றி. இடதுசாரி ஜனநாயக முன்னணி மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொற்று நோயைச் சமாளிப்பதற்கும், வளர்ச்சி, நலப்பணிகள் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் பாதையில் கேரளாவை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் நாம் முன்னெப்போதையும் விட ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
நாளையே பதவியேற்பு விழா நடைபெறும் என வெளியான செய்திகள் உண்மையல்ல. நாளை திருவனந்தபுரம் சென்றதும், ராஜினாமா கடிதம் அளிப்பேன். அதன் பின்னர் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி, மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் இன்று 31,950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 49 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
No comments:
Post a Comment