(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் ரயில்வே சேவையாளர்கள் பாதுகாப்பற்ற வகையில் சேவையில் ஈடுபடுகிறார்கள். சேவையாளர்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து ரயில்வே திணைக்களம் எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். தீர்வு கிடைக்கப் பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்படுவோம். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் ரயில் போக்குவரத்து சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிபபிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுiகையில், ரயில் நிலைய சேவையாளர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளார்கள். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிக்கும் வளங்களையும், பாதுகாப்பு உபகரணங்களையும் ரயில் திணைக்களம் ரயில் நிலையங்களுக்கு இதுவரையில் வழங்கவில்லை. ரயில் சேவையாளர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சேவையில் ஈடுபடுகிறார்கள்.
நாடு தழுவிய ரீதியில் 45 ரயில்வே தொழிற்சங்கங்கள் தற்போது காணப்படுகின்றன. சுகாதார பாதுகாப்பு காரணி, மற்றும் ரயில் நிலைய பொது முகாமையாளர் பதவி வெற்றிடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை 15 ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஒன்றினைந்து ரயில்வே திணைக்களத்திடம் முன்வைத்துள்ளன.
இரண்டு ரயில் தொழிற்சங்கத்தினரது குறுகிய நோக்கத்திற்காக ரயில் நிலைய பொது முகாமையாளர் நியமணம் தொடர்ந்து தடைப்பட்ட வண்ணம் உள்ளது.
இதற்கு கடுமையான எதிர்ப்பை ரயில்வே பொறியியலாளர் சங்கத்தினர் வெளிப்படுத்தி பதில் பொது முகாமையாளரின் பரிபாலனத்திற்கு கீழ் சேவையாற்ற முடியாது என குறிப்பிட்டு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளார்கள்.
ரயில் நிலைய பொது முகாமையாளர் பதவி வெற்றிடம், கொவிட்-19 வைரஸ் தாக்கம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டுள்ளோம். ஆனால் இதுவரையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறவில்லை.
இக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி 15 ரயில்வே தொழிற்சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட தீர்மாணித்துள்ளார்கள். ரயில்வே சங்கத்தினரது தொழிற்சங்க நடவடிக்கையினால் ரயில் போக்குவரத்து சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பு விடயங்களை கருத்திற்கொண்டு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment